July 2025



 கிறிஸ்துவுக்குள் அன்பான தம்பி தங்கையரே! சென்ற இதழில், இங்கிலாந்து தேசத்தில் பிறந்து, சீன தேசத்திற்கு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்ட ஹட்சன் டெய்லர், அதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததை வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோமா! 

ஒருமுறை ஹட்சன் டெய்லரின் கையில் இருந்ததோ ஒற்றைக் காசுதான். அந்நேரத்தில், சுகவீனமான ஒரு தாயாருக்காக ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தார் ஹட்சன் டெய்லர். ஜெபிக்கும்படி அந்தத் தாயாரின் வீட்டிற்கு அவர் சென்றபோது, அங்கே அந்தத் தாயாரின் பிள்ளைகளோ பசியினால் வாடிக்கொண்டிருந்தனர். தாயாருக்காக அவர் ஜெபிக்க ஆரம்பித்தபோது, அவரது வாயில் வார்த்தைகள் வெளிவரவில்லை. தொண்டை அடைத்தது. கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பசியைப் போக்காமல், மாய்மாலக்காரனாக ஜெபிக்கிறாயா? என்று அவர் மனசாட்சியில் சுடப்பட்டார். தொடர்ந்து, அவர்களைப் பசியாற்றிய பின் ஜெபித்து அங்கிருந்து திருப்தியோடு சென்றார். அதன் பலன் அவருக்கு பல மடங்காகத் திரும்பக் கிடைத்தது. இப்படித்தான் அவர் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டு, தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தில் வளர்ந்தார்.

கடினமாக உழைத்து, உடற்பயிற்சி செய்து மருத்துவம் பயின்றதோடு, இறையியலையும் அத்துடன் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 

    உலகின் பல பாகங்களில் சென்று ஊழியம் செய்து கொண்டிருந்த மிஷனரி ஸ்தாபனங்களின் தகவல்களையும் விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டார். எளிமையாக மற்றும் தன்னலமற்ற வாழ்க்கை வாழ்ந்து, தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஊழியத்திற்கு என்று கொடுத்து, கிறிஸ்துவோடு கூட மிகவும் நெருங்கி வாழும் வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டார். 

ஒருமுறை, விஷக் காய்ச்சலினால் மரித்துப்போன ஒருவருடைய உடலைப் பரிசோதிக்கும்போது, இவரும் அந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். சீனாவிற்கு 

மிஷனரியாகச் சென்று அங்கேயே மரிக்கவேண்டும் என்று இருந்த கனவெல்லாம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் எதுவும் இல்லாமல், விசுவாசத்தில் உறுதியாக இருந்து பூரண சுகம் பெற்றார். இவ்விதமாக, பல்வேறு அனுபவங்களின் மூலமாகப் பெலப்படுத்தப்பட்டவராய், 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹட்சன் டெய்லர் சீனாவிற்கு கப்பலேறி, ஒருசில நண்பர்கள் அவரை வழியனுப்ப தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார். 

நெடுந்தூரம், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடற்பிரயாணம் செய்து சீன நாட்டில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து அவர் கரை இறங்கியபோது, வரவேற்பதற்கு என்று யாரும் இல்லை; நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ ஒருவரும் இல்லை. இருப்பினும், சீன மண்ணில் கால் வைத்தபோது அவரது உள்ளமெல்லாம் குளிர்ந்தது. கனவெல்லாம், தரிசனம் எல்லாம் நிறைவேறும் காலமல்லவோ அது! அந்த சீன நாட்டின் உள்ளே மூலை முடுக்கெல்லாம் புகுந்து மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும் தாண்டி நதியாகப் பாய்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப் போகிறவர் அல்லவா அவர்!! 

இளம் வாலிப மிஷனரியை நோக்கி பல சவால்கள் தேடி வந்தன! விலைவாசி உயர்வினால் உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலைமை மற்றும் உள்நாட்டு மக்களின் புரட்சி அவருடைய உற்சாகத்திற்கு முட்டுக்கட்டை கொடுக்க, அவரோ மிகக் குறைந்த மொழி அறிவோடு இருந்தாலும், சீன மக்களைச் சந்திப்பதிலும், நற்செய்தி நூல்கள் மற்றும் கைப்பிரதிகளைக் கொடுப்பதிலும், சீனர்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவதிலும் மிகவும் துடிப்பாக இறங்கினார். 

இவ்வாறாக, கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியத்தைச் செய்துகொண்டிருந்த வேளையில், உயரமான குடிகார பலசாலி மனிதன் கையில் ஒரு முறை இவர் மாட்டிக்கொண்டார். தலை முடியை பிடித்து இவரை அந்த மனிதன் உதைத்த நிலையில், மயங்கி விழுந்தபோதிலும், மீண்டும் எழுந்து எல்லோருக்கும் நற்செய்தி நூல்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தார்; காரணம் இனி ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்குமா என்ற ஏக்கம் தான். ஒருபுறம் எதிரிகள் இருக்கத்தான் செய்தார்கள்; ஆனால், மறு பக்கமோ அவருக்கு வரவேற்பும் இருந்தது. ஒரு அரசாங்க அதிகாரி அவரைப் பார்த்து, அவருடன் மிகவும் மரியாதையாக மற்றும் ஆறுதலாகப் பேசி ஒரு புதிய ஏற்பாட்டையும் பெற்றுக்கொண்டார்.  சீனர்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால் சீன மக்களைப் போன்றே ஆக வேண்டும் என்று அறிந்திருந்த அவர், சீன மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். சீன உடைகளை வாங்கி அணிய ஆரம்பித்தார். இது ஐரோப்பிய மிஷனரிகளுக்குப் பிடிக்கவில்லைதான், 'எப்படியாயினும் சிலரையாவது இரட்சிக்கும்படிக்கு நான் யூதருக்கு யூதனாகவும், கிரேக்கருக்கு கிரேக்கனாகவும், எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன்" என்று பவுல் அடியார் சொன்னது போல, அவர்  வாழ ஆரம்பித்தார். இதனால் சீக்கிரத்திலே அவருக்கு முதற்கனியாக பலன் கிடைத்தது. பின்னால் இருந்து அவருடைய கரங்களைத் தாங்கி பிடித்து உதவியோ மற்றும் ஒத்தாசையோ செய்வார் யாருமே இல்லை. ஆண்டவருடைய வழி நடத்துதலும் அவருக்கு ஓர் அடி மாத்திரமே கிடைத்தது. என்றபோதிலும், அவருக்கு தொலைநோக்குத் தரிசனம் இருந்ததால், அவர் பாதத்தில் அதிகமாகக் காத்திருந்தார். உள்நாட்டில் ஆங்காங்கே எதிர்பாராத புரட்சிகள் வெடித்த நிலையில், பிரிட்டிஷ் அதிகாரிகளால் உள்நாட்டிற்குள் செல்ல மறுக்கப்பட்டார். ஆனால், அவரோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதை பார்க்கிலும், சீன மக்களுக்கு இயேசுவை இரட்சகராக அறிவித்து, அவர்களைப் பாதுகாப்பதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருந்தார். 


ட்ச்சுங் என்ற நகரில் ஓர் மருத்துவமனையை நிறுவி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்தார். ஒருமுறை, ஒரு மருத்துவமனையோ அல்லது மருத்துவரோ இல்லாத வேறொரு இடமான நிங்போ என்ற நகருக்குச் செல்வதற்காக வேலைக்காரனோடு தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றபோது, வேலைக்காரனோ அவருடைய பொருட்களை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். இந்நிலையில், சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், களைத்துப் போய் மயங்கிய நிலையில், தன் பொருள்கள் பறிபோனதைப் பற்றி கொஞ்சமும் அவர் கவலைப்படவில்லை, அவரது கவலை எல்லாம் சீனர்களைப் பற்றியே இருந்தது. - தொடரும்


June 2025



 

ஒல்லியான உருவம்! ஒதுங்கி வாழும் சுபாவம்!! கொண்ட இவர் லண்டன் மாநகரின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  மிஷனரியாகப் போக அவருக்கு ஆசை; ஆனால், இவரை பார்ப்பவர்கள் இவர் அதற்கு தகுதியானவரா? என்றுதான் சந்தேகப்படுவர். இவர் உலக ஐசுவரியம் இல்லாதவர், வறுமையில் வாழ்ந்தவர், வாழ்க்கை வசதிகளை உதறித் தள்ளியவர். அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினவர். ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் விசுவாசித்து அவரின் வார்த்தையை உறுதியாய் பற்றிப்பிடித்து, அவரையே நம்பிச் சார்ந்ததே இவரது வாழ்க்கையின் ரகசியம். வேதத்தில் சொல்லப்பட்ட 'என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு" என்று பவுல் சொன்னது போல, இவரைப் போன்ற மிகப் பெலவீனமான மனிதர்களையே தம்முடைய மகிமைக்காக, தம்முடைய சித்தத்தின்படி தேவன் பயன்படுத்தி வருகிறார். லண்டனில் மருத்துவம் பயின்று வந்த நாட்களில், ஒரே ஒரு ரொட்டியை காலையும் மதியமும் சாப்பிட்டுக் கொண்டு, வீட்டிற்கும் மருத்துவக் கல்லூரிக்கும் இடையே உள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்று வந்து கொண்டிருந்தார். யார் இவர்....?

    அன்று உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்ததும், இன்று பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் இரண்டாவது பெரிய நாடானதுமான சீன நாட்டிற்கு முன்னோடி மிஷனரியாகச் சென்று பெரிய "சீன உள்நாட்டு மிஷன்"- ஐ ஸ்தாபித்தவர், இவர் தான் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்.

1832 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார் ஹட்சன் டெய்லர். நல்ல கிறிஸ்தவ பெற்றோர், அவருடைய இளமையிலேயே அவருக்கு வேதத்தைப் போதித்ததோடு, எபிரேய மொழியையும் கற்றுக் கொடுத்தனர். அவருடைய தகப்பனார் தன் செல்ல மகனின் அருகில் உட்கார்ந்துகொண்டு பல புதிய மற்றும் அரிய காரியங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்களில், ஒரு நாள் அவர்களின் பேச்சு பெரிய சீன நாட்டைப் பற்றியதாக இருந்தது. ஐரோப்பிய நாட்டில் இருந்த திருச்சபைகள் சீன நாட்டிற்கு மிஷனரிகளாக யாரையும் அனுப்புவதோ அல்லது எதையாவது செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமோ அவர்களுக்கு இல்லை என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த குட்டித் தம்பியான ஹட்சன், 'நான் பெரியவனாகி படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்' என்று உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு ஐந்து வயது தான். 

ஆவிக்குரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் 14 ஆம் வயதில் ஒரு கைப்பிரதியில், "எல்லாம் முடிந்தது" என்ற தலைப்பில், நம் அன்பு தெய்வம் இயேசு சிலுவை மரத்திலே சொன்னதாக எழுதப்பட்ட வார்த்தைகளைப் படித்த போது தான் பாவ உணர்வு அடைந்து இரட்சிப்புக்கு நேராக தன் இருதயத்தை அவர் திருப்பினார். என்ன நடந்தது தெரியுமா குட்டீஸ் உங்களுக்கு...? அதே நாளில் அவருடைய தாயார் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தில் இருந்து கொண்டு தன் அன்பு மகனுக்காக அதிக பாரத்தோடு அவன் எப்படியாவது இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதம்! அதுதான் "இரட்சிப்பு". குட்டித் தம்பித், தங்கையே, உனக்கு இந்த அனுபவம் உண்டா? அதைப் பெற்றுக் கொண்ட புதிய அனுபவத்தினால் ஹட்சன் மிகவும் சந்தோஷமடைந்தார். தனது தாயார் வீட்டிற்கு வந்தபோது அதை பகிர்ந்து கொண்டு இருவருமாக சேர்ந்து ஆண்டவரைத் துதித்தனர்.

அது ஒரு மதிய வேளை முழங்காலில் தன் திறந்த வேதாகமத்தோடு நின்று கொண்டு, ஆண்டவரிடம், "இயேசுவே நான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கற்றுத் தாரும். நீர் சொல்லும் வரை இந்த அறையில் இருந்து நான் வெளியே செல்லப் போவதில்லை என்று ஜெபித்தார் ஹட்சன். "சீன தேசத்திற்கு நீ செல்ல வேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்ற தெளிவான சத்தம் அவருக்கு கேட்டது. மீட்பின் அனுபவம் பெற்ற சில மாதங்களிலேயே அழைப்பின் குரல் அவரைத் தேடி வந்தது.

இனி சும்மா இருக்க முடியுமா என்ன...?  சீன தேசத்தின் தகவல்களைத் தேடிச் சேகரித்தார். அதற்கென்று எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்து கொள்ளவும், மொழியை கற்றுக் கொள்ளவும் முனைந்து நின்றார். சுயமாகவே சீன மொழியைக் கற்றுக்கொண்டு லூக்கா சுவிசேஷத்தை சீன மொழியில் படித்து முடித்தார். 

சீன மக்களின் இதயங்களை வெல்ல சுவிசேஷத்தை பிரசங்கிப்பதோடு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்த அவர், மருத்துவம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்டார். ஹல்லில் மருத்துவராக இருந்த தனது மாமாவிடம் சென்று சில அடிப்படை திறன்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்நாட்களில், ஹட்சன் முதன் முதலில் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நம்பிக்கைக்கடுத்த பாடங்களையும் கற்றுக் கொண்டார்.                            
                                                                                                                                    - தொடரும்






April 2025

 



Hi குட்டிப் பிள்ளைகளே! இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாக, கடவுள் இல்லை என்று நாஸ்திகனாக வாழ்ந்த அதோனிராம் ஜட்சனின் வாலிப நாட்களைக் குறித்தும், வியாதிப்படுக்கையில் கிடந்த தனது நண்பனின் மரணத்தைத் தொடர்ந்து, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, 'ஆண்டவரை மாத்திரமே தன் வாழ்நாள் முழுவதும் பிரியப்படுத்தவேண்டும்' என்ற எண்ணத்தோடு மிஷனரியாக தன்னை அர்ப்பணித்துப் புறப்பட்டுச் சென்ற அவரது வாழ்க்கையைக் குறித்தும், பர்மாவின் சக்கரவர்த்தியினால் சிறைச்சாலையில் வைக்கப்பட்டதைக் குறித்தும் மற்றும் விடுதலை செய்யப்பட்டதைக் குறித்தும் சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சிறையிலிருந்து அவர் விடுதலையானதைத் தொடர்ந்து அவர் செய்த ஊழியத்தின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளலாமா!

சிறையிலிருந்து அதோனிராம் ஜட்சன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் ஒரு அறையில், ஆன் அம்மையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவராகப் படுத்திருந்தார். ஆன் அம்மையார் சற்று குணமடைந்த பின்னர் அங்கிருந்து குடும்பமாக வேறு இடத்திற்கு மாறிச் சென்று, அங்கே அவரை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் கமிஷனருக்கு உதவி செய்வதற்காக ஆவா பட்டணத்திற்குச் சென்றார் ஜட்சன். ஜட்சன் அங்கு இருக்கும்போது, அந்தோ பரிதாபம்! டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆன் அம்மையார் இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. மனைவியின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியாத நிலையினை எண்ணி ஜட்சன் துக்கப்பட்டார்.

துக்க பாரத்தினால் தொய்ந்துபோன அவர், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த காட்டில் ஒரு சிறிய குடிசை அமைத்து ,அதில் சில காலம் தங்கி இருந்தார். பிற மிஷனரி நண்பர்கள் மூலமாக அவரை ஆறுதல்படுத்தித் தேற்றினார் தேவன். இச்சூழ்நிலையிலும், நடந்த எல்லா காரியங்கள் மூலமாக தன்னை ஆண்டவர் தமது அருகில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஜட்சன் உணர்ந்தபடியால், அவர் ஆண்டவரின் அழைப்பையோ, நடந்த காரியங்களைப் பற்றியோ கேள்விகள் கேட்கவில்லை. அதன் பிறகு அவர் 'மௌல்மீன்' என்ற ஊரில் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் தொடர்ந்து அவருடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். பின்பு சபையும் அங்கே உண்டானது. 1834 ஆம் ஆண்டு முழு வேதாகமும் பர்மிய மொழியில் வெளிவந்தது. 1840 ஆம்  ஆண்டு அது முழுவதுமாக திருத்தி அமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நூற்றுக்கும் அதிகமான மக்கள் சபையில் சேர்க்கப்பட்டனர். அந்நாட்களில், கடுமையான உழைப்பினால் பலன் குன்றி காச நோயினால் பாதிக்கப்பட்டார் ஜட்சன். 

33 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே ஜட்சன் தனது தாய் நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். என்றாலும் அவர் அங்கே அதிக நாள் தங்கி இருக்க விரும்பவில்லை. மீண்டும் அவர் பர்மாவுக்குத் திரும்பினார். திரும்பியவர் திரும்பவும் தன் தாய் நாட்டைக் காணவே இல்லை. மனைவியின் மறைவுக்குப் பின் தனியாக 24 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார். அவர் பர்மிய மொழியில் ஒரு சொல் அகராதியை அமைத்து முடித்தார். தனக்கு சுகம் கிடைப்பதற்காக அவ்வப்போது கடல் யாத்திரை செய்தார். அவ்விதமாக ஒரு முறை கடல் யாத்திரை சென்றபோது 1850 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ம் நாள் தன்னுடைய 62 ஆம் வயதில் அவர் நடுக்கடலில் கப்பலிலே மரித்தார். மூன்று பிள்ளைகளையும் நற்கனிகளைத் தரும் விதைகளாக மியான்மரின் மண்ணிலே அடக்கம் செய்தார். மனைவியையும் அப்படியே பர்மாவிலே விதைத்தார். ஆனால், அவர் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை பூமி எது தெரியுமா? எந்த தேசத்தை தன் இருதயத்தில் ஏந்தி மிஷனரியாக கடந்து வந்தாரோ அந்த தேசத்தின் பெயர் உள்ள பரந்து விரிந்த இந்து மகா சமுத்திரத்தில் தான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

"இந்த பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டுச் செல்வது இல்லை." என்று இளைஞனாக இருக்கும்போதே வைராக்கியமாக தீர்மானித்து இருந்தார். அதன் பயனாக 30 ஆண்டுகள் கழிந்த பிறகு 1850 இல் பர்மாவில் 63 ஆலயங்களும், 123 அருட்பணியாளர்களும், ஊழியர்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட 7000-க்கும் மேலானவர்களும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் ஏற்றி வைத்த தீபம் இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது

March 2025




    வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும், அனுபவிக்கவும் புறப்பட்ட அதோனிராம் ஜட்சனுக்கு இளம்போதகர் ஒருவர் சத்திய வார்த்தைகளைச் சொன்னபோது, அது அவரை எரிச்சல் அடையவைத்தது. உல்லாசமாய் ஊரெல்லாம் சுற்றி வந்து, இரவு நேரம் மிகவும் களைப்பாய் இருந்த ஜட்சன் சத்திரம் ஒன்றில் சற்று இளைப்பாற ரூம் கேட்கின்றார். காலியாக இருந்ததோ ஒரே ஒரு ரூம் தான்; ஆனால், அடுத்த ரூமில் இருப்பவரோ ஒரு நோயாளி, மரணப்படுக்கையில் அலறிக்கொண்டும், கதறிக் கொண்டும் பரிதாபமாக இருக்கிறார். 

வேறு வழியின்றி அந்த அறையில் படுக்க நினைத்தபோது, அந்த அடுத்த அறைக்கு டாக்டர்கள் வந்துபோவதும் மற்றும் நோயாளியின் கதறலும் இவரின் நிம்மதியைக் கெடுத்து தூங்கவிடாமல் செய்தது. 'மரணத்திற்குப் பின் எங்கே? என்ன நடக்கும்? மரணம் என்றால் என்ன?' இப்படிப்பட்ட காரியங்கள் அவர் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தன. இங்கே அலறிக்கொண்டிருக்கிறானே அவன் மரித்தபின் எங்கு போவான்? என் உயிர் நண்பன் ஈமாஸ் இங்கே இருந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லி 'நரகம் என்று ஒன்றும் கிடையாது, அதற்குப் பயப்படாதே' என்று சொல்லுவானே அவன் என்று சிந்தித்தார். அதிகாலை வேளையிலே அந்த சத்தமும் அடங்கிப்போனது. யார் அந்த மனிதன்....? காலையில் விசாரித்தபோது அவருக்கு தலையே சுற்றி உலகமும் கூடவே சேர்ந்து தலைகீழாகச் சுற்றியது. ஏனென்றால் உயிருக்காகப் போராடிய அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, தன்னுடைய உயிர் நண்பன் ஜேக்கப் ஈமாஸ் தான். இதனை அறிந்தபோது, ஜட்சன் அலறினார். பீதி அடைந்த அவர் மேலும் சிந்திக்கலானார், நிம்மதி இன்றித் தவித்தார். 

     இன்றைக்கும், 'நரகம், மோட்சம் இவைகளை யார் கண்டது? எல்லாம் கற்பனைதான், எல்லாம் இந்த உலகத்தில்தான், அதோடு எல்லாம் முடிந்துவிடும்; மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை' என்று சொல்லும் ஒரு கூட்டத்தினர் உண்டு. குட்டீஸ் இப்படிப்பட்டவங்ககிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சரியா? 

ஆறு வாரங்களுக்குப் பிறகு 1808-ல் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் அதோனிராம் ஜட்சன்.  அதன் பின் ஆழ்ந்த நிம்மதியைக் கண்டடைந்தார். தன்னுடைய ஆசை விருப்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 'ஆண்டவரை மாத்திரமே தன் வாழ்நாள் முழுவதும் பிரியப்படுத்தவேண்டும்' என்று எழுதிவைத்துக்கொண்டார். அப்போது, அவர் படித்த ஒரு புத்தகம் அவருக்கு மிஷனரி சவாலைத் தந்தது. இதனால், அவருடைய உள்ளத்தில் மிஷனரி பாரம் வந்தது. சிறுபிள்ளையாக இருக்கும்போது, 'உலகம் எங்கும் புறப்பட்டுப் போங்கள்' என்று பாடிய பாடல் அவரை அதிகமாகக் கவர்ந்தது. அது மட்டுமல்ல, இவரது விருப்பம் எல்லாம் தான் ஒரு வெளிநாட்டு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்பதாகவே மாறிவிட்டது. அவரை அனுப்புவதற்காக மிஷனரி சங்கம் அமெரிக்காவில் அந்த நாட்களில் இல்லாதபடியால், எப்படி செல்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. இது பற்றி அவர் ஊக்கமாக ஜெபித்தார். மிஷனரியாகப் புறப்பட்டுப் போவது பற்றிய தன்னுடைய ஆழமானக் கருத்துகளை அருட்பணி வாஞ்சை நிரம்பிய தனது நான்கு நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு, ஐந்து பேருமாக சேர்ந்து இதற்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அன்பின், ஆண்டவரோ விசேஷித்த முறையில் அவருக்கு வழியை திறந்துவைத்தார். 

     அதோனிராம் ஜட்சன், ஆன் ஹசில்டன் என்ற அம்மையாரை 1812 ஆம் ஆண்டு மணந்தார். பதிமூன்று நாட்களில் மிஷனரிப் பணி செய்யும் பொருட்டாக இந்தியா நோக்கி புதுமணத் தம்பதியினர் பயணமானார்கள். இதயத்தில் இந்தியா இருந்தும், ஆண்டவரின் திட்டங்கள் அவரை மியான்மர் தேசத்திற்கு நேராக திசை திருப்பியது. 

  அந்நாட்களில் மியான்மர் சர்வாதிகாரியான ஒரு மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மக்கள் அவனுக்கு அடிமைகளாகவே இருந்தனர். அங்குள்ள அரசன் கொடுங்கோல் ஆட்சி செய்து ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்தையும் வஞ்சித்து அவர்களை அடிமையாக நடத்திவந்ததோடு, அரசரின் விருப்பம்தான் நாட்டின் சட்டமாக மாறியது. எந்த பர்மிய அரசனும் வேறு மதம் அங்கு பரவுவதை அனுமதிக்கவில்லை. மிஷனரிகளுக்கு அவன் ஒரு எதிரியாகவே விளங்கினான். புத்த மதம் பர்மாவின் தேசிய மதமாகக் கருதப்பட்டு வந்தது. அது பெரும் அளவில் அங்கு பரவி இருந்தது. அம்மதத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார்கள். ஒரு கிறிஸ்தவரோ அல்லது மிஷனரியோ கூட பர்மாவில் கிடையாது. கிறிஸ்துவைப் பற்றி அங்கு ஒருவரும் ஒருபோதும் கேள்விப்பட்டதே கிடையாது. கிறிஸ்து தங்கள் உள்ளங்களில் இல்லாதபடியினால் துக்கம் நிறைந்த முகத்தோடும், பாரம் நிறைந்த இருதயத்தோடும் அங்குள்ள மக்கள் அங்கும் இங்குமாக நடந்து அலைந்து திரிந்தனர். அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும் வாய்ப்பிற்காக ஜட்சன் தம்பதியினர் மிகவும் அதிகமாகச் சிரத்தை எடுத்து, அந்த நாட்டு மொழியை கற்க ஆரம்பித்தார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜட்சனின் மனைவி இந்தியாவில் உள்ள சென்னைக்கு பிரசவ மருத்துவ உதவிக்காகச் சென்றார். அங்கு அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது; ஆனால், எட்டு மாத காலத்திற்குப் பிறகு அந்த குழந்தை இறந்துவிட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வேதனை அடைந்தனர். 

    பர்மியர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே வேதம் கிடைக்கும் என்றால் அவர்களால் இரட்சிப்பைக் கண்டடைய முடியும் என்பதை ஜட்சன் நம்பினார். ஆகவே அவர் ஒரு நாளில் 14 மணி நேரம் வரை பர்மிய மொழியை ஆழமாகக் கற்று வேதாமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஒரு சிறிய அச்சிடும் கருவியை வைத்துக்கொண்டு, அதன் மூலம் அவர் துண்டுப் பிரதிகளையும், வேதாகமத்தின் பகுதிகளையும் அச்சிடத் துவங்கினார். அச்சிடும் தொழில் அறிந்திருந்த திரு. ஹாக் என்னும் புதிய மிஷினரி தன்னுடைய மனைவியோடு அங்கு வந்து சேர்ந்தார். மத்தேயு நற்செய்தி நூலை விரைவாக அச்சிட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். கிறிஸ்துவைப் பற்றிப் படிப்பதற்கு ஏதாவது புத்தகங்கள் தாருங்கள் என்று கேட்ட ஒருவருக்கு வெறும் ஐந்து பக்கங்கள் மாத்திரமே ஆயத்தமாக இருந்த மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தைக் கொடுத்தார். இப்படியாக தாகமுள்ள ஆத்துமாக்கள் அவர்களைத் தேடி வந்தனர். 

      பொதுமக்கள் கூடுவதற்காக ஒரு இடத்தை ஜட்சன் அமைத்து பர்மிய மொழியில் பிரசங்கம் பண்ணினார். இரவு நேரங்களில் அவர் அதிக நேரம் மக்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பார். இவர் பேசுவதை கேட்பதில் அநேகர் அக்கறை காட்டினார்கள். அவர்களில் ஒரு சிலர் புத்த மதக் குருக்களாகவும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் வந்து இறங்கி ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே 'மௌன் நவ்' என்ற மனிதன் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன்வந்தார். துன்பம் வரினும், மரணம் வரினும் தைரியமாக அதை ஏற்றுக் கொள்ள முன்வந்த இவரைப் போன்று மேலும் 18 பேர் அவர்களோடு மந்தையில் சேர்ந்துகொண்டனர். அந்நாட்களிலே இவரது மனைவி ஆன் ஹசில்டன் அதிகமாக சுகவீனம் அடைந்ததினாலே சிகிச்சைக்காக அமெரிக்க தேசத்துக்கு அனுப்பப்பட்டார். 

     ஜட்சன் தன்னுடைய போதனைகளையும், மொழிபெயர்ப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வந்தார். அவர் இறுதியாக புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். அப்பொழுது புதிய சக்கரவர்த்தி ஒருவர் பதவியேற்றார். தான் செய்திருந்த வேலைக்கு அனுமதி பெறும்படிக்கு அவரைக் காண ஜட்சன் சென்றார். அந்நாட்களில், பிரிட்டனுக்கும் பர்மாவுக்கும் இடையே யுத்தம் நடந்தபடியினால் வெளிநாட்டினர் அனைவரும் ஒற்றர்களாகவே பார்க்கப்பட்டபடியால், ஜட்சன் கைது செய்யப்பட்டு 17 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் மிகவும் அதிகமான கொடுமைகளை அனுபவித்தார் ஜட்சன்.  

        20 மாதங்கள் பெரும்பாடுபட்ட பிறகு ஜட்சன் விடுதலை செய்யப்பட்டு பர்மிய அரசின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். ஆறு வாரங்கள் அவர் இந்தப் பணியைச் செய்த பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் வீடு சென்றபோது அவருக்குக் காத்திருந்த காட்சி அவர் மனதை அதிகமாக உருகவைத்தது.                       ......... தொடரும்

 

FEBRUARY 2025

 

இவரு படிப்பில படுசுட்டி! கணக்குல புலி !!  குருவானவர் வீட்டுப் பிள்ளை, பின்ன சொல்லவா வேணும்? சிறுவயதிலேயே பைபிளும் நல்லாத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், பிரசங்கமும் பண்ணத் தெரியும்! பின் நாட்களில் ஆண்டவர் தன்னை மிஷனரி ஊழியத்திற்கு என்று தெரிந்தெடுத்ததை அறிந்துகொண்ட இவர், நம் இந்திய நாட்டிற்கு மிஷனரியாக வரவேண்டும் என்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? கப்பலில் நெடுங்கடல் பிரயாணம் செய்து கல்கத்தா துறைமுகம் வந்து கரை இறங்கிய இவரை இந்திய நாட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது கிழக்கு இந்திய கம்பெனி. 'என்ன இது ஆண்டவரின் சித்தம் இல்லையா?' என்று ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்த இவர் அங்கிருந்து கப்பல் ஏறி பர்மா என்று அழைக்கப்பட்ட நம் அண்டை நாடான மியான்மரின் தலைநகரம் ரங்கூனில் போய் இறங்கி தடம் பதித்தார். நம் தாய் நாடாம் இந்தியாவை நேசிக்கும் தேவன், மியான்மர் தேசத்தையும் நேசித்ததினால் இவரை அங்கு ஓர் அப்போஸ்தலனாக, முன்னோடி மிஷனரியாக அனுப்பிவைத்தார். யார் இவர்? இவர்தான் அதோனிராம் ஜட்சன்... அவரைப் பற்றிதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.

       அந்த பாஸ்டர், வீட்டில் உள்ள குட்டிப் பிள்ளைகள் சேர்ந்து சபை ஆராதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர். 'இயேசுவை அறியாமல் உலகில் வாழும் பிற மக்களுக்கும் சுவிசேஷத்தைச் சொல்லப் புறப்பட்டுச் செல்லவேண்டும்' என்ற அர்த்தமுடைய பாடல்கள் பாடப்படுகின்றன. நான்கு வயது குட்டிப் பையன் ஒரு நாற்காலியில் ஏறி நின்றுகொண்டு, அப்படிப்பட்ட ஒரு சவாலான பிரசங்கத்தைச் செய்கிறான். இது ஒரு ஆராதனையோ அல்லது சண்டே ஸ்கூலோ அல்ல, வெறும் விளையாட்டு தான். ஆனால், வரும் நாட்களில் இதற்காகவே அவர் பிடிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை ஜட்சன் அறியவில்லை.

1788 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் நாளில் அமெரிக்காவின் மல்தேனில் உள்ள மாசாருசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்த இவர், பிறவியிலேயே மிகவும் திறமைசாலி. மூன்று வயதிலேயே வேதத்தின் ஒரு அதிகாரம் முழுவதையும் படித்ததைக் கண்ட இவரது தந்தை மிகவும் வியப்படைந்தார். கணிதத்தில் பெரிதும் விருப்பம் இருந்ததால், 10 வயதிலேயே கணித மேதையாக விளங்கினார். மேலும் இலத்தின் கிரேக்க மொழிகளில் கருத்துள்ள இறையியல் புத்தகங்களையும் படித்தார், கிரேக்க மொழியில் இவருக்கு இருந்த திறமை குறிப்பிடத்தக்கது. பதினாறாம் வயதில் பிரவுன் யூனிவர்சிட்டியில் படித்த இவர், 19 வயதிலே தன் வகுப்பில் முதல்வராக பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் அவரைப் போன்ற திறமையான ஜேக்கப் ஈமாஸ் என்பவர் நண்பராகக் கிடைத்தார். ஆனால், அவரோ ஆண்டவரை நம்பாத, 'கடவுள் இல்லை' என்று சாதிக்கக் கூடிய மனிதன். நண்பனாலே கவரப்பட்ட அந்தோனிராம் ஜட்சன், தானும் வேதத்தை நம்பாத ஒருவனாக மாறியதால், 'கடவுளை ஒருவன் தனிப்பட்ட முறையிலே அறிந்துகொள்ள முடியாது' என்று கூறினார். தான் ஒரு முழு நாஸ்திகனாக மாறியதோடு தன் பெற்றோரிடமும் 'கடவுள் இல்லை' என வாதம் புரிந்தார். இதனால் போதகர் குடும்பமான அவருடைய பெற்றோர் மிகவும் புண்பட்டார்கள். 

       இது எப்படி இருக்கு... பாருங்கடா செல்லங்களே! சின்ன வயசுல எவ்வளவு நல்லப் பிள்ளையா வேதத்தை நேசித்த அதோனிராம் இப்படி மாறிவிட்டாரே... நீங்க அப்படி இருக்க மாட்டீங்க தானே....?

     ஜட்சன் தன்னுடைய பட்டப்படிப்பிற்குப் பிறகு தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக மற்றும் நகைச்சுவை ஆசிரியராக வரவேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டார். ஆகவே அவர் நியூயார்க் பட்டணத்தில் உள்ள ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். குறிக்கோள் ஒன்றும் இல்லை, நிம்மதியும் இல்லை, திருப்தியும் இல்லவே இல்லை. ஆனால், அவருடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டு இயேசுவை நோக்கி ஓட வைத்த சம்பவம் தான் என்ன என்று அடுத்த இதழிலில் பார்ப்போமா?

                                         - தொடரும்