March 2026

 















மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற விருப்பத்துடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ் முல்லரைக் குறித்து சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவரது விசுவாச வாழ்க்கையைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா?

யுனிவர்சிட்டியில் தான் பயின்றுகொண்டிருந்த நாட்களில், ஆரம்பமுதலே தனது தேவைகள் தேவனால் அற்புதமாகச் சந்திக்கப்படுவதை உணர்ந்த ஜார்ஜ் முல்லர், விசுவாசத்தில் ஒருநாளும் பின்வாங்கிப் போகவில்லை. கைப்பிரதிகள் மற்றும் நற்செய்தி நூல்கள் வாயிலாக இரட்சிப்பின் செய்தியைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்; அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயம் செய்தார். தேவனைத் துதிப்பதற்காகவும், வேதத்தைத் தியானிப்பதற்காகவும் மற்றும் ஜெபிப்பதற்காகவும் அநேகர் முல்லரைத் தேடிவந்தனர். முல்லர் யுனிவர்சிட்டியிலிருந்து வெளியேறும்போது, ஒரு சிறு ஊழியர் கூட்டத்தையே ஆயத்தப்படுத்திவிட்டுத்தான் சென்றார்.

1827-ல் ருமேனியா நாட்டில் ஜெர்மானியர்களுக்கு ஊழியம் செய்யும்படி அவர் ஆயத்தப்பட்டபோது, திடீரென்று ஏற்பட்ட போரின் காரணமாக அது கைகூடவில்லை. எனவே, யூதர்கள் மத்தியில் மிஷனரியாகச் செல்ல தீர்மானித்தார். லண்டன் மாநகர் சென்று பயிற்சியும் பெற்றார். 1829-ல், தனது 24 ஆம் வயதில், லண்டனில் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் கடுமையாக உழைத்து எபிரேய மற்றும் ஆங்கில மொழிகளை அவர் கற்கவேண்டியிருந்தது. பயிற்சி முடியும்வரை காத்திராமல், லண்டனின் யூதக் குடியிருப்புகளுக்குச் சென்று தெருப்பிரசங்கம் செய்து, 50 சிறுவர்களைக் கூட்டி வேதபாடவகுப்புகள் நடத்திவந்தார். 

எக்ஸெடர் என்ற இடத்தில் இவர் ஊழியம் செய்தபோது, இவரது விசுவாச வாழ்க்கையினால் தொடப்பட்ட மேரி குரோவ்ஸ் என்பவருடன், 1830 அக்டோபர் 7 ஆம் தேதி தனது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். முல்லரின் வைராக்கியமான ஊழியத்திற்கும் மற்றும் விசுவாச ஊழியத்திற்கும் உறுதுணையாயிருக்க தன்னை ஒப்புக்கொடுத்தவர் மேரி. முல்லர் தம்பதியர் தங்கள் தேவைகளுக்காக கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். சிலவேளைகளில் உணவு இல்லாமல்; அவர்கள் விசுவாசம் வெகுவாகச் சோதிக்கப்பட்டாலும், அவர்கள் மனம் தளர்ந்துபோய்விடவில்லை. அதே வேளை, தேவைக்கு அதிகமாக கிடைத்துவிட்டால், மேரி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்தளித்துவிடுவார். அன்றன்று தேவையான அப்பமே போதும் என்ற விசுவாச வாழ்க்கையே வாழ்ந்தார்கள் முல்லர் தம்பதியர். 1832-ல், முல்லரின் நெருங்கிய நண்பரான ஹென்றி கிரெய்க், முல்லரிடம் பிரிஸ்டல் நகரின் ஆவிக்குரிய நிலை குறித்தும் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் பகிர்ந்ததோடு, முல்லரும் தம்மோடு இணைந்து அங்கே ஊழியம் செய்தால் நலமாயிருக்கும் என்ற தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார். தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தாமதிக்காமல் பிரிஸ்டல் நகர் நோக்கி புறப்பட்ட அந்தப் பயணம், பிற்காலங்களில் பிரிஸ்டலை மையமாகக் கொண்டே அவர் ஊழியம் எழும்பப்போகிறது என்பதற்கு வழிகாட்டியது. 

அப்போது, பெரும் சோதனை அலைபோல் மோதியடித்தது. அந்நாட்களில் காலரா நோய் மிக வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளைகொண்டது, வெப்பம் மிகக் கடுமையானது, எண்ணற்ற மக்கள் மடிந்துகொண்டிருந்தனர். எனினும், தனது சுகத்தை துச்சமாகக் கருதி, மரித்துக்கொண்டிருந்த அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார் முல்லர். இச்சூழலில் முல்லர் தம்பதியருக்கு லிடியா என்ற அன்பு மகள் பிறந்தாள். 

'தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்" என்ற வசனத்தை வாசித்தபோது, இப்படிப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குக் கிடைத்தது. பிரிஸ்டலின் சேரிப்பகுதிகளில் எண்ணற்ற சிறுவர் சிறுமியர் படிப்பறிவில்லாமல் வாழ்க்கையை வீணாக்கியதோடு, உணவு பற்றாக்குறையோடும் காணப்பட்டதைக் கண்ட முல்லர், ஒரே ஒரு ஷில்லிங் மாத்திரமே கையில் இருந்தபோதிலும், விசுவாசத்தோடு இவ்ஊழியத்தைத் துவங்கினார். முல்லர் குடும்பத்தில் இரண்டாம் மகன் பிறந்தபோது, குடும்பத்தின் தேவைகளுக்குக்கூட பணம் இல்லைதான்; இருப்பினும், தன்னுடைய தேவைகளை தேவனின் கரங்களில் வைத்துவிட்டு, விசுவாசத்தோடு காத்திருந்தார். 20 பவுண்ட்கள் கிடைத்தால், இலவசமாக வேதாகமங்களை மக்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார்; அன்றே ஒரு பெண் முலம் அது கிடைத்தது. அற்புதமான துவக்கம், அத்தோடு ஊழியமும் படிப்படியாக உயர்ந்து ஏழை மாணவர்களுக்கான பகல் நேர கிறிஸ்தவப் பள்ளியும் தொடங்கப்பட்டது. 

அனாதை விடுதி என்பது இங்கிலாந்தில் அறியப்படாததாகவே இருந்த அந்நாட்களில், பகல் நேரப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் யாராவது அனாதைகளானால், காவலர்கள் அவர்களை பிச்சைக்கார விடுதிகளில் போட்டுவிடுவார்கள். எனவே, சிறு சிறு விடுதிகள் அமைத்து உணவு உடை கொடுக்கப்பட்டால் மாத்திரமே அவர்களைக் காப்பாற்றமுடியும் என்று முல்லர் யோசித்தபோது, உதவி செய்ய முன்வருவார் யாரும் இல்லை. என்றபோதிலும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ..? அப்போது ஏ. எச். பிராங்க் என்பவரின் வாழ்க்கை வரலாற்று நூல் முல்லரின் கையில் கிடைக்க, தேவன் அவரை எப்படியாய் ஏழைப் பிள்ளைகளைப் பராமரிக்கச் செய்தார் என்றும், முல்லர் அவரது ஹோமில் இரண்டுமாத காலம்  தங்கியிருந்ததையும் நினைவுகூர்ந்தார். வேதத்தை திறந்தார், 'வாயை விரிவாய்த் திற நான் அதை நிரப்புவேன்" என்ற வசனம் பளிச்சென்று அவரது கண்ணில் பட்டது; விசுவாசம் துளிர்த்து வளர்ந்தது. தேவனைத் துதித்தார் முல்லர். ஐந்தாம் நாள், 'தங்கள் வீட்டுச் சாமான்களை விடுதிக்காக கொடுப்பதோடு, தாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி விடுதியில் பணிசெய்ய விரும்புவதாக ஒரு விசுவாசத் தம்பதியர் கடிதம் எழுதியிருந்தனர். 30 ஏப்ரல் 1836-ல் 30 சிறுமிகளுடன் ஹோம் ஆரம்பமானது. அன்றாடத் தேவைகளை தேவன் அற்புதமாகப் பூர்த்தி செய்தார்; தனது தேவைகளை அவர் வெளியே யாரிடமும் கேடடதில்லை. விசுவாசத்தில் பின்வாங்கவில்லை! கடன்பட்டதில்லை! பிள்ளைகளுக்குத் தேவையான உணவுகளும் உடைகளும் கிடைக்காமல் இருந்ததும் இல்லை!! வற்றிப்போகாத விசுவாசத்தினால் அற்புதமாக விடுதிகள் பராமரிக்கப்பட்டன!!! பதிலளிக்கப்பட்ட ஜெபங்களே இவ்விடுதிகளின் வரலாறு. 

திடீரென்று முல்லருக்கு ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. 1842 பிப்ரவரி மாதம் அது, ஜெபித்துவிட்டு முல்லர் தூங்கிவிட்டார். ஆனால், உறங்காத தேவனோ பார்த்துக்கொண்டேயிருந்தார். காலை நேரம் அது, தொழிலதிபர் ஒருவர் தன் அலுவலகம் நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தார்; ஆனால், முல்லரின் விடுதியைத் தாண்டி அவரால் செல்லமுடியவில்லை. திரும்பி வரும்போது கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்று நினைத்தவராக மீண்டும் நடக்க ஆரம்பித்தார்; ஆனால் அவரது கால்கள் போகவில்லை. தேவன் அவரை நெருக்கி ஏவினதால், உடனே கீழ்ப்படிந்து கொடுத்த பின் தான் அவரால் அங்கிருந்து நகர முடிந்தது. 

ஒருநாள் காலை, உணவிற்காக மேஜையில் தட்டுகளும், கிண்ணங்களும், கரண்டிகளும் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் உணவு? பிள்ளைகள் உணவிற்காக ஜெபித்து முடித்து கண்களைத் திறந்தபோது, கதவு தட்டப்பட, அங்கே ரொட்டிக் கடைக்காரர் ரொட்டிகளுடன் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் கதவு தட்டப்பட பால்காரர் வண்டி பழுதானதினால், பாலைக் கொடுக்கும்படியாக நின்றுகொண்டிருந்தார். அந்நாட்களில், 'பிள்ளைகளின் சத்தம் தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக" அத்தெருவில் குடியிருந்த ஒருவர் எழுதியிருந்தார். பிள்ளைகள் சுயாதீனமாகப் படிக்கவும், ஓடிவிளையாடவும் வில்சன் தெரு வீடுகளில் இடமும் இல்லாதிருந்தது. அதுவரை விடுதிக்காக சொந்த கட்டிடம் கட்டுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை முல்லர். 300 சிறுவர்கள் தங்குவதற்கு கட்டிடங்களைக் கட்ட விசுவாசத்தோடு ஊக்கமாக ஜெபித்துவந்தார் முல்லர். முதலில் ஒரு விசுவாசி, 1000 பவுண்ட்கள் அனுப்ப, சில நாட்களில் லண்டனைச் சேர்ந்த ஒரு இஞ்சினியர் தான் எந்தவித ஊதியமும் பெறாமல் புதிய விடுதியின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டு முடித்துத் தருவதாக அங்கு வந்தார். பிரிஸ்டலுக்கு வெளியே ஆஷ்லி டௌன் என்ற குன்றுகள் நிறைந்த இடத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் கட்டிடப்பணி தொடங்கியது; தேவ கிருபையால் மூன்றே ஆண்டுகளில் முன்னூறு பிள்ளைகள் சுயாதீனமாகத் தங்கக்கூடிய ஹோம் கட்டி முடிக்கப்பட்டது. 1870 ஆம் ஆண்டு 2000 பிள்ளைகள் தங்கும்படியாக புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு சிறிய பட்டணம் போல் ஆனது. இந்நாட்களில், கணவரோடு 40 ஆண்டுகள் இணைபிரியாமல் சேவை செய்த மேரி முல்லர் இளைப்பாறுதலில் பிரவேசித்தார். 

ஒரு ஷில்லிங்கைக் கொண்டு அற்பமாக ஆரம்பமான இவ்வூழியம், ஆயிரக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுத்ததோடு, முதியோர் இல்லங்கள், ஞாயிறுப் பள்ளிகள், பகல் நேரப்பள்ளிகள் என இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியது. 189 மிஷனரிகளை தாங்கினார் முல்லர். தனது 70 ஆம் வயதில், விடுதிகளின் பொறுப்பை மகள் லிடியாவின் கணவர் ஜேம்ஸ் ரைட்டிடம் ஒப்படைத்துவிட்டு, அவரோ ஓய்வெடுக்காமல், உலகளாவிய நற்செய்திப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டார். இந்தியா உட்பட 42 நாடுகளில் 30 இலட்சம் மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார்.  வேதாகமத்தை ஒன்று இரண்டு முறையல்ல, 200 முறைகள் முழுவதுமாய் வாசித்து முடித்திருந்தார்; அதிலும், 100 முறைகள் முழங்காலிலேயே வாசித்திருந்தார். 1898 ஆம் ஆண்டு தனது 92 வயதிலும் ஓய்வின்றி செயல்பட்டு வந்தார். அனாதைகளின் அருமைத் தந்தையாய் ஆதரவற்றோரின் அடைக்கலமாய் வாழ்ந்த முல்லர், 1898-ம் ஆண்டு மார்ச் 9 மாலை படுக்கைக்குச் சென்றவர், காலையில் படுக்கையிலிருந்து எழாமல், நித்தியத்தைக் கழிக்கும்படியாகக் கர்த்தரிடம் சென்றார்! ஆண்டவரின் நாம மகிமைக்காக அரும்பெரும் காரியங்களைச் செய்து, வாழ்வில் ஒளி இழந்தோர்க்கு வழிகாட்டி, எதிர்காலம் பெறச் செய்தவர் முல்லர். அனாதை இல்லங்களை நடத்துவோருக்கு முன்னோடியாய் வாழ்ந்தவர்! அன்பான தம்பி தங்கைகளே! உங்களிடமிருந்தும் கூட இயேசு எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்! இல்லையா.




Feb 2026

 



ஹலோ கிட்ஸ்! உங்க பெற்றோர் மூலமாக நீங்க நிறைய நன்மைகளைப் பெற்றவங்க அப்படித்தானே...! ஏனென்றால், உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் அனாதைகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது அனாதை இல்லங்களிலும் விடுதிகளிலும் இருக்கிறார்கள். நீங்க கூட பண்டிகை நாட்களில் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும்போது இந்த ஹோம்களுக்குச் சென்று அவர்களோடு உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். இந்த இதழில், விசுவாசத்தினால் அநேக அனாதை விடுதிகளை நிறுவி, எண்ணற்ற சிறுவர் சிறுமியருக்குத் தந்தையாக இருந்து ஆதரவளித்து, அவர்களுக்கு வேதத்தைப் போதித்து, கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய ஒரு அங்கிளைப் பற்றி பார்ப்போமா...?

    பாடல் வேளை முடிந்து எல்லாரும் முழங்கால்படியிட்டு ஜெபிக்கின்றனர்ஆனால், வேதாகமக் கல்லூரியில் படிக்கும் ஜார்ஜ் முல்லருக்கு அது முடியவில்லை; அவர் ஆச்சரியப்படுகிறார். அந்த வல்லமையான ஜெபம் அவரை அசைத்ததோடு, தேவனோடு தன்னால் சரியாக ஐக்கியம் கொள்ளமுடியாததற்கு தன்னுடைய பாவங்களே காரணம் என்றும் உணரவைத்தது. அதுவரை வாழ்ந்து வந்த மோசமான வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்தினார். அவரின் நெடுநாள் மனப்போராட்டத்திற்கு அங்கே விடுதலை கிடைத்தது.

                ஐரோப்பாவில் பிரஷியா என்ற நாட்டில் 1805 செப்டம்பர் 27- ல் ஜார்ஜ் முல்லர் பிறந்தார். ஜெர்மானியரான அவரது தகப்பனார் வரி வசூலிக்கும் ஓர் அரசு அதிகாரி. முல்லரின் தந்தை தேவைக்கு அதிகமான பணத்தை பிள்ளைகள் கையில் தந்ததால், அதை இஷ்டப்படி செலவு செய்து உல்லாசமாய் வாழ்ந்தார் முல்லர். இளம் பிராயத்திலேயே சீட்டு விளையாடுவது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டு பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்து தன் தந்தையின் பாக்கெட்டிலும் கைவைத்ததோடு, அவர் சேர்த்து வைத்திருந்த அரசாங்கப் பணத்தையும் திருடி விளையாடினார். ஆலய ஆராதனையில் காணிக்கை போடுவதற்கு கொடுக்கப்படும் பணத்தையும் காணிக்கைப் பையில் போடாமல் அதையும் சூதாட்டத்தில்தான் செலவளிப்பார் என்றால் எப்படி என்று பாருங்களேன்..? ஒருநாள் மேஜையில் இருந்த சில கரன்சி நோட்டுக்களைத் திருடி அதைத் தன் ஷ_க்குள் வைத்துக் கொண்டு, தந்தை அங்கே வந்தபோது நல்லபிள்ளை போல் நடித்தார். அடிக்கடி பணம் திருடு போவதால் தன் மகனை சோதிக்கவே அவர் பணத்தை மேஜையில் வைத்திருந்தார். வசமாக மாட்டிக்கொண்ட முல்லருக்கு ~செம| அடிக்கிடைத்தும் மனம் மாறவில்லை.

        தன் மகன், பள்ளிப் படிப்பை முடித்து, வேதாகமக் கல்லூரியில் படித்து, பின் ஒரு அரசாங்க ஆதரவு பெற்ற லுத்தரன் சபை குருவானவராக ஆகிவிட்டால் வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழலாம் என்பதே தந்தையின் விருப்பமாக இருந்தது. குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்த முல்லரோ, 14 வயதில் அதிகாலை 2 மணி வரை கேளிக்கை விடுதியில் சீட்டாடி வெறித்து ஹாஸ்டலுக்கு வந்து படுத்தார். காலையிலே சற்றும் எதிர்பாராத செய்தியுடன் அவர் தந்தை அங்கே வந்து சேர்ந்தார். என்ன ஆயிற்று...? அன்பான தாயார் மரித்துவிட்டார்...! ஆம். தான் குடிபோதையில் சீட்டாடிக்கொண்டிருந்த அதேநேரத்தில்தான் தாயார் வேதனையில் துடிதுடித்து மரித்தார் என்பதைக் கேட்டு திடுக்கிட்டார். துக்கம் தொண்டையை அடைத்தது உண்மைதான்; என்றாலும், அது மனம்திரும்புதலுக்கு ஏற்ற துக்கமாக அமையவில்லை. மீண்டும் அதே பழைய மோசமான வாழ்க்கையே... தொடர்ந்தது.

     16 வயதில் ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றிப்பார்க்கும் ஆசை தொற்றிப் பிடித்தது; ஆனால், கையிலோ பணமில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்த அவர், தகப்பனார் வசூலித்து வரச்சொன்ன வாடகைப் பணத்திலும் கை வைத்துவிட்டார். 1821 - ல் முல்லரின் சுற்றுப்பயணம் துவங்கியது. மேக்டிபர்க், பிரான்ஸ்விக் போன்ற பட்டணங்களில் சுற்றித் திரிந்து, ஆடம்பரமாகச் செலவு செய்து, அதிக பணம் கொடுத்து பெரிய ஹோட்டல்களில் தங்கி, கெட்டக்குமாரன் போல கையிலிருந்த பணமெல்லாம் காலியானது. விடுதிக்குக் கொடுக்க பணம் இல்லாதபோது, அவரது விலையுயர்ந்த ஆடைகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்! இருப்பினும், அவருக்கு வீடு திரும்ப ஆசையின்றி சில இடங்களில் ஏமாற்றித் தப்ப முயன்றபோது, பிடிக்கப்பட்டு நன்றாக அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வார காலம் முடியும்போது, இதையறிந்த தந்தை ஓடோடி வந்து கட்டவேண்டிய பணத்தைக் கட்டி மகனை மீட்டார். பாருங்க குட்டீஸ்! எப்படிப்பட்ட முல்லரை இயேசப்பா தெரிந்து கொண்டாங்க பார்த்தீங்களா...?

   இப்போது படிப்பில் கொஞ்சம் ஆர்வம் வந்தாலும் கூட, கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டபாடில்லை! வெளியே தெரியும்படியாகச் செய்யாவிட்டாலும், மறைவாகத் தொடர்ந்தார். தாய் மொழியாம் ஜெர்மன் மற்றும் இலத்தின், பிரெஞ்ச் மொழிகளிலும் வரலாற்றிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றார். எல்லாரிடமும் நல்லவராக நடித்தார். தந்தையின் விருப்பம் நிறைவேற குரு பட்டம் பெற ஹாலே யுனிவர்சிட்டியில் சேர்ந்தார். மற்றவர்களுக்காக தன்னை தேவனுக்கு முன்பாக ஆயத்தப்படுத்தவேண்டுமே என்றில்லாமல், ~நல்லவன்| என்று பெயர் வாங்கவேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோள் மாத்திரமே அவருக்கு இருந்தது. பள்ளிப் பருவ நண்பர் பேட்டாவோடு சேர்ந்து ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலி நாட்டைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் துடித்தார். ஆனால், பாஸ்போர்ட் வேண்டுமே... தந்தையின் கையெழுத்து வேண்டுமே... அந்தோ! கள்ளக் கையெழுத்து போட்டு பாஸ்போர்ட்டும் வாங்கிவிட்டார். பணத்திற்கு எங்கே போவது..? முல்லர் தனது பாடநூல்களை அடகுவைத்து தேவையான பணத்தையும் திரட்டிவிட்டார்; பயணமும் புறப்பட்டார் நால்வரோடு... அவர்களின் பணத்தையும் தானே நிர்வாகம் செய்து, கள்ளக் கணக்கு எழுதி அவர்களையும் ஏய்த்துவிட்டார். இத்தனையாய் உலகத்தை அனுபவித்தும், கசப்பே மிஞ்சியது. அப்போதுதான் ஒரு வீட்டுக்கூட்டத்தில் முழங்காலில் அவர்கள் ஜெபித்த ஜெபம் முல்லரை அசைத்தது. இரவெல்லாம் தூக்கமின்றி மனப்போராட்டத்தில் அவர் புரண்டார். வாக்னர் என்ற சகோதரன் அவரை கிறிஸ்துவுக்குள் நடத்தியபோது, சுவிட்சர்லாந்தின் அழகான மலைகளில் சுற்றியபோது கிடைக்காத சந்தோஷமும் சமாதானமும் அவருக்குக் கிடைத்தது. இரட்சிப்பின் சந்தோஷம் கிடைக்கப்பெற்ற அன்றே ஊழிய அழைப்பினையும் பெற்றார்.

                புதிய துவக்கம், புதிய வாழ்க்கை... தனது நண்பர்களுடன் இரட்சிப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஆரம்பமானது. எந்த யூத கோத்திரத்திலிருந்து இயேசு வந்தாரோ, எந்த சொந்தங்களே அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ, அந்த யூதர்கள் நடுவில் போலந்து நாட்டில் ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்திருந்த ஹெர்மன் பால் என்ற புதிய நண்பர் மூலம், தானும் ஒரு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்தபோது, தன் தந்தையின் கோபத்திற்கு ஆளானார். ஓய்வு பெற்றபின் தானும் மகனோடு சேர்ந்து வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கனவுகண்ட தந்தைக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், வசதியான வாழ்க்கையல்ல, மெய்யான அர்ப்பணிப்புடன் தியாகமாகச் செய்யும் அருட்பணிதான் தன் அழைப்பு என்று கடினமான ஆனால் ஒரே தீர்மானமாக ஜெபித்து தன் தகப்பனாரின் கைகளில் பணஉதவியை எதிர்பாராமல் ஆண்டவரின் கைகளில் தன்னைத் தந்தார் முல்லர்.

Jan 2026

 













எல்லா குட்டீஸ்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! எங்கும் ஏகப்பட்ட இயற்கைப் பேரழிவுகள்... பூமிஅதிர்ச்சிகள், வெள்ளங்கள்... இன்னும் யுத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரவேல் - பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா - உக்ரேன் போன்ற நாடுகளில் சில ஆண்டுகளாக யுத்த மேகங்கள் கலைந்தபாடில்லை. 15 ஆம் நூற்றாண்டில், 13 வயதினிலே தெய்வ தரிசனங்கள் பெற்று, தேவசத்தம் கேட்டு, பின் 16 வயதிலே யுத்தத்திற்குச் சென்று, தேவனின் பெலத்தில் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையைத்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். 

பிரெஞ்சில் 'ஜீன் டி ஆர்க்" என்று அழைக்கப்பட்ட இவர், பிரான்ஸ்க்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த நூறாண்டுப் போரின் காலத்தில், பிரான்சின் டாம்ரேமி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1412 ஆம் ஆண்டு பிறந்தார். உங்களைப் போன்று படிக்கவோ அல்லது எழுதவோ அவருக்குத் தெரியாது. ஆனால், அவர் மிகுந்த நம்பிக்கையும் தைரியமும் கொண்டவர். 

டீன்ஏஜ் பருவம் தொட்டதிலிருந்து ஜோன் தேவனை அதிகமாகத் தேட ஆரம்பித்தார். சில வேளைகளில் தெளிவான குரலில் தேவ சத்தத்தை அவர் கேட்டபோது, அதை மக்களிடம் கூறினார். பிரான்ஸ் தேசத்தை விடுவிக்க வேண்டும் என்றும், இளவரசர் சார்லஸ் VII  - ஐ அரசராக்க உதவவேண்டும் என்றும் ஜோன் மக்களுக்குச் சொன்ன போது, மக்கள் அவரை சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுகிறது என்று வேடிக்கைப் பார்த்தனர். ஓர் இளம்பிள்ளை என்பதால் ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை; அவரை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் பலரிடம் பேசி எப்படியோ இளவரசர் சார்லஸை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு எட்டியது. அவரது ஆன்மீக பெலத்திலும், பேச்சிலும் ஆழ்ந்த நம்பிக்கையிலும் ராஜாவே மிகவும் வியப்படைந்தார். 

1429 ஆம் ஆண்டு முற்றிக்கையிடப்பட்ட ஆர்லியன்ஸ் நகருக்கு அனுப்பப்பட்ட பிரெஞ்ச் நிவாரணப்படையை வழிநடத்த ஜோனுக்கு படைக்கவசம் அளிக்கப்பட்டது. பிரெஞ்ச் ராணுவத்துடன் போருக்கு சென்று மன்னருக்கு உதவி செய்து பிரான்ஸ் நாட்டை திரும்பப் பெறவேண்டும்; இதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் கட்டளை! கட்டளை பிறந்ததும் வீரமுடன் எழும்பினார் ஜோன்; தன் தலை முடியைக் கத்தரித்துக்கொண்டு, போர் உடை அணிந்து, வேதத்தில் வரும் தெபோராள் போல போர்க்களம் கிளம்பிவிட்டாள்! அவரின் வருகை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எங்கும் யுத்தசத்தம்... கார்மேகங்கள் போன்று தெரிகிறது. மக்கள் நிம்மதியின்றி பயத்துடனும் கலக்கத்துடனும் இங்கும் அங்குமாக அலைமோதுகின்றனர். 

இவர் கிறிஸ்;தவ பெண் என்பதால் திருச்சபை போதகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் சிறு பெண்ணை உற்சாகப்படுத்தாமல் மாறாக அவளை பரிகாசமும் கேலிக் கிண்டலும் செய்தனர். இப்பெண் என்னதான் செய்வாள் என்று ஏளனமும் செய்தனர். ஆனால் தாவீதைப்போல கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வந்த சிறிய படையோ வீரமுடன் போரிட்டது. ஜோன் பிரெஞ்ச் வீரர்களுக்கு அதிகமாக நம்பிக்கையூட்டினதால் ஒன்பது நாட்களுக்குள்ளே ஆங்கிலேயர்களிடமிருந்து ஆர்லியன்ஸ் நகரைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடினர். இது போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஓன்றல்ல, இரண்டல்ல... தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைக் குவித்துவிட்டார் ஜோன்! ஜோனின் தலைமையில் நடந்த இந்த 'ஆர்லியன்ஸ் நகரின் விடுதலை" பிரான்ஸ்க்கான மிகமுக்கிய வெற்றியாக வரலாற்றில் அமைந்தது. இந்த வெற்றிகள் தான் சார்லஸ் VII - ஐ ரீம்ஸ் நகரில் அரசராக முடிசூட உதவின. இந்திய வரலாற்றில் ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் போன்று பிரிட்டீஷ் ராணுவத்திற்கு எதிராக வீரப்பெண்மணியாய் வெற்றிச்சிறந்தார் ஜோன்!! 

என்ன சுட்டிப்பிள்ளைகளே உங்களைப்போன்றே ஜோனும் படுசுட்டிதான்!!! யுத்தத்தை முன்னின்று நடத்துவது சாதாரண காரியமா? 

இந்நாட்களில் யுத்தங்களினால் எத்தனை மரணங்கள்... அழிவுகள்... இழப்புகள்... தாய் தந்தையை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகள், உணவுக்காக ஓலமிட்டும் ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் சாவோர்... அப்பப்பா... ஒவ்வொரு நாளும் நியூஸ் பேப்பரிலும்.. டிவியிலும் பார்க்கும்போது எத்தனையாய் வேதனை...? 

ஆனால் பின்னால் என்ன நடந்தது...? மதவாதிகளுக்கோ ஜோனை பிடிக்கவில்லை. அவர்கள் ஜோனை சந்தேகித்தனர், ஏனென்றால், அவர்களுக்கு இப்படிப்பட்ட தேவதரிசனங்கள், திட்டங்கள் கிடைக்கவில்லை... இல்லையா... பிள்ளைகளே..? தாங்கிக்கொள்ள முடியாத அக்கூட்டம் அவளை 'பொய்புரட்டுக்காரி" என்று தீர்ப்பிட்டு திருச்சபைக்கு புறம்பாக்கியது. ஆனால், அவரோ தனக்கெதிராக சொல்லப்பட்ட அத்தனை அவதூறுகளையும் ஆணித்தரமாக மறுத்ததோடு தகுந்த விளக்கங்களையும் தந்தார். இது அவர்களை மேலும் மேலும் நடுங்கச்செய்தது. 

1430 ல் ஜோன், பிரிட்டீஷ் - பிரெஞ்ச் கூட்டாளிகளான உளவு பார்த்த எதிரிகளால் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பிரிட்டீஷ் ஆதரவுடைய நீதிமன்றத்தில் அநியாயமாக விசாரிக்கப்பட்டது. 'சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்.." என்று அன்று கூவின கூட்டம் போல் இங்கேயும் 'மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும்" என்று ஏவிவிட்டனர். ஜோனை விடுவிக்கவோ அவருக்காக பரிந்து பேசி வாதிடவோ யாருமே இல்லையா? ஜோனுக்கு கொடுக்கப்பட்ட வேலையும் நோக்கமும் (purpose)  நிறைவேறிவிட்டனவா? 

ஆம்; எதற்காக ஜோன் தேவனால் பிடிக்கப்பட்டாரோ அதை செய்து முடித்துவிட்டார். தன்னை பூரணமாக தேவனின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். 

1431-ல் மே 31 அன்று இளம்பெண் ஜோன் தனது 19 வயதிலேயே ரூவான் நகரில் மரத்தில் கட்டப்பட்டவராய்; தீயில் உயிருடன் எரித்துக் கொளுத்தப்பட்டார். கொடுங்கோலர்கள் வேடிக்கைப் பார்க்க, அத்தீயின் நடுவே அவர் உதடுகள் 'இயேசுவே... இயேசுவே..." என்று முணுமுணுக்க உடல் எரிந்தது... உயிர் பிரிந்தது... விண் நோக்கிப் பறந்தது...! 

இயேசு கிறிஸ்து விண்ணைவிட்டு மரிப்பதற்காகவே மண்ணில்வந்து அத்தனை பாடுகளையும் வேதனைகளையும் நமக்காக சகித்து மரித்து உயிர்த்தார் என்றால் அவருக்காக நாம் எந்த தியாகத்தையுமே பெரிதாக செய்துவிட முடியாது. 

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மறுவிசாரணையில் ஜோன் 'நிரபராதி" குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டதோடு அவர் தியாகி என்று தெரிந்து நிரூபிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது! அதோடு கத்தோலிக்க திருச்சபையால் அவருக்கு 'புனிதர்" பட்டமும் கொடுக்கப்பட்டது!! ஜோன் ஆப் ஆர்க் இன்றும் பிரெஞ்சு தேசத்தின் ஒற்றுமை, வீரம் மற்றும் நம்பிக்கையின் நீடித்த சின்னமாக விளங்குகிறார். 

அன்பான செல்லங்களே! எப்படி இப்பெண் உலக வரலாற்றில் மட்டுமின்றி தேவனுடைய பெரிய history -  யில் வந்திட்டாங்க பார்த்தீங்களா? நீங்களும் அதே ஹிஸ்டரியில் ஒரு முக்கியமான part அப்படித்தானே...? உங்க வாழ்க்கையிலும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு தானே... அது 

Dec 2025

 



கிறிஸ்துவுக்குள் அன்பான குட்டிப்பிள்ளைகளே!

     புதிய ஏற்பாட்டிலே யோவான் (ஜாண்) என்ற பெயரில் சிலர் உண்டு; இன்றும் உலகமெங்கும்‘ஜாண்’ என்ற பெயரில் நிறைய பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதோடு அநேக தேவமனிதர்கள், மிஷனரிகள் பற்றியும் கேட்டிருப்பீர்கள். இங்கே ஒரு ஜாண் ஐயாவைப் பற்றி பார்ப்போமா? 

“நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” இது வேதவசனம் தான்; ஆனால், வேதம் இருந்தால் தானே படிக்கவும் மற்றும் அதின்படி நடக்கவும் முடியும். வெறும் குருக்கள் கைகளில் மாத்திரம் வேதம் இருந்தால், சாதாரண மக்கள் எப்படி ஆழ்ந்த சத்தியங்களை அறிந்து கீழ்ப்படிய முடியும்? அறியாமை என்னும் இருளை அகற்றி, சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நம்மை நடத்தி, வாழ்க்கைக்கு வழிகாட்டுவதோடு நித்திய ஜீவனையும், நித்திய மகிழ்ச்சியையும் தருவது வார்த்தையான இயேசுவின் வேதமே! அப்படித்தானே செல்லங்களே!! 

14 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ திருச்சபைகளில், அதிகமான ஆடம்பரங்கள், அறியாமைகள், பாரம்பரியச் சடங்குகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் நிறைந்து காணப்பட்டதோடு, மதவாதிகள் வசம் மாத்திரம் வேதம் இருந்தபடியால், தங்கள் பொய்யான உருட்டுத்தனத்தால் தங்களையும் மற்றும் மக்களையும் குருடராக்கி வைத்திருந்தனர். இந்நிலையில், ஒரு மாபெரும் புரட்சியாளராய் எழும்பிய, “சீர்திருத்தத்தின் விடிவெள்ளி” என்று அழைக்கப்பட்டவர் தான் ஜாண் விக்ளிப்.  

இங்கிலாந்தின் வடயார்க்ஷயரின் விக்ளிப் என்னுமிடத்தில் ஒரு பணக்கார வீட்டின் மகனாக கி.பி. 1320 - ல் இவர் பிறந்தார்.  தனது கல்லூரி, இறையியல் படிப்புகளை முடித்து, 1360 - ல் போதகராகப் பணிபுரிந்தார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் 1372 – ல் தத்துவத்துறையில் ‘டாக்டர்’ பட்டம் பெற்று, “ஆக்ஸ்போர்டு மலர்” என்று அழைக்கப்பட்டார். அந்நூற்றாண்டின் தலைச்சிறந்த கல்விமான் மற்றும் ரோமன் கத்தோலிக்க ஆயராகவும், ஆக்ஸ்போர்டு இறையியல் கல்லூரியின் காண்டர்பரி மன்றத்தின் மேலதிகாரியாகவும் பொறுப்பேற்றார். வேதத்திற்கு மாறான போப்பின் ஆணைகளை அவர் எதிர்த்து எழுதி பேசியதால் ஆக்ஸ்போர்டிலிருந்து விரட்டப்பட்டார். அந்தோ.. அவருக்கு எத்தனை பெரிய சோகம்…!

குருவானவர் நடத்தும் நற்கருனையில் பங்குபெற்றால் மட்டுமே இரட்சிப்படைய முடியும் என்றும், ஒரு ஆத்துமாவிற்கும் மற்றும் நரகத்திற்கும் இடையில் குருவானவர் இருப்பதாகவும், ஆத்துமாக்களின் இரட்சிப்பு குருவின் கைகளில் தான் இருப்பதாகவும் போப்பைச் சார்ந்தவர்கள் போதித்தனர். ரோமாபுரிக்குப் புனிதப் பயணம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையையும் ஆயர் மற்றும் பேராயர்கள் ஊக்குவித்தனர். விக்ளிப் இதற்கு விரோதமாக கொதித்தெழுந்ததோடு உறுதியாகப் போராடினார். கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் கிடைக்கும் இலவச இரட்சிப்பின் சத்தியங்கள் புறக்கணிக்கப்பட்டு, காணிக்கைகள், பணம் மற்றும் புனிதயாத்திரைகள் மூலம் கிறிஸ்துவை அடையலாம் என்ற புரட்டு உபதேசங்களை விக்ளிப் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சபைகளில் நடைபெறும் தவறுகளான பாவமன்னிப்புச் சீட்டு விற்பது, மதத்தலைவர்கள் பணம் சம்பாதிக்க மக்களைக் கொள்ளையடிப்பது மற்றும் மதத்தலைவர்களின் அரசியல் ஆட்சி போன்றவற்றை அவர் விமர்சித்தார்.

திருச்சபைகளில் வேரூன்றி காணப்பட்ட மூடத்தனங்களை குழிதோண்டி மூடப் பிரயாசப்பட்டதால் போப்பிற்கும், பாதிரியார்களுக்கும் பகைவனானார்.  

வேதத்தின் சத்தியங்களை தாய்மொழியில் கற்றறியும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என்ற எண்ணத்தோடு,  இலத்தின் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்த்து 1380 –ல் வெளியிட்டார். அப்போது அச்சுக் கூடமும் இல்லை, கையினால் எழுதப்பட்ட வேதாகமமே மக்கள் கைகளை அடைந்தது, சாதாரண மக்களின் கைகளில் வேதத்தை அவர் தந்ததால், ‘பன்றிகள் முன் முத்துக்களை எறிந்து விட்டார்’ என்ற பெரும் குற்றச்சாட்டை விக்ளிப் மீது சுமத்தி போப்பைச் சார்ந்தவர்கள் அவரைப் பகைத்தனர். ஆனால், மக்களோ அவரை ஆதரித்தனர். ஊர்ஊராகச் சென்று
வேதத்தின் பிரதிகளை மக்களுக்கு வழங்கினர். 

விக்ளிப்பின் போதனைகளால் கோபமடைந்த போப், அவரை விசாரித்து தண்டிக்க ஆணையிட்டார். அரசனும் மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்ததாலும், எதிர்த்த போப் சீக்கிரத்தில் இறந்ததாலும், எதிரிகளால் அவருக்கு ஆரம்பத்தில் வந்த ஆபத்து நீங்கியது. சிறிது காலம் கடந்து அரசரும் விக்ளிப்பிற்கு எதிராக மாறவே, லண்டனில் நடந்த ஆலோசனை மன்றத்தில் 1382 – ல் விக்ளிப்பின் கொள்கைகளைக்; கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவைகளைப் பரப்புவோரைச் சிறையிலடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரது போதனைகள் பின்னர் ஜாண் ஹஸ், மார்ட்டின் லூத்தர் போன்ற மறுமலர்ச்சித் தலைவர்களைத் தட்டி எழுப்பியது. அவருடைய எழுத்துக்கள் தடை செய்யப்பட்டன. எப்பக்கத்திலும் நெருக்கங்கள், நிந்தனைகள் நடுவிலும் விக்ளிப் தன் பணிகளை அமைதியாகச் செய்து வந்தார். பலமுறை விசாரணையாலும் மற்றும் சித்திரவதையாலும் அவர் உடல் நிலை மிகவும் மோசமானது. 1384 – ல் லட்டர்வொர்த் (Lutterworth) என்னுமிடத்தில் போதக ஊழியம் செய்துவந்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, உடல் மண்ணில் விழ தன் உயிரை தேவனின் கரங்களில் ஒப்புவித்தார். இங்கிலாந்து மன்னர் ஹென்றி IV கி.பி. 1401- ல் விக்ளிப்பின் ஆதரவாளர்களை எரித்துக் கொல்ல சட்டம் இயற்றினார். பக்தர்கள் பாடுகளை பொறுமையோடு சகித்தார்கள். 

ஆமா அந்த ஐயா விலைக்கிரயம் செய்து வாங்கித் தந்த பைபிளை கையில வச்சிக்கிட்டு நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க…? படிச்சி அப்படியே வாழ்க்கையில apply பண்ணுவோமா சுட்டீஸ்?

November 2025

 











    ஸ்காட்லாந்து தேசத்தில் வறுமையான ஒரு குடும்பத்தில் குடிகாரத் தகப்பனுக்கும் பக்தியான தாய்க்கும் இரண்டாவது மகளாகப் பிறந்து, தந்தையின் பல துன்பங்களின் மத்தியிலும் தாயின் அன்பினால் வேதத்தின் வழியில் நடத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தந்தை மற்றும் சகோதரர்களின் மரணத்தின் மத்தியிலும் கிறிஸ்துவுக்காய் ஊழியம் செய்யத் தொடங்கி, தனது 28-ம் வயதில் நைஜீரிபாவுக்கு மிஷனரியாகப் புறப்பட்டுச் சென்ற மேரி மிட்செல் ஸ்லெசரைக் குறித்து கடந்த இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவர் நைஜீரியாவில் செய்த ஊழியத்தைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா? 

இன்றைய நைஜீரியாவின் காலாபர் நதி பாயும் இடம். மனிதர்கள் அங்கு மனிதர்களாகவே இல்லை, வாழ்க்கைக்கான சட்டமில்லை, வாழ்க்கை முறையும் இல்லை. மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஒரு தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காயும் முன்பே, அக்குழந்தைகள் அழும் சத்தம் வருவதற்கு முன்பே, கொடூரன் ஒருவன் மூர்க்கமாய்க் குழந்தைகளை தாயின் கரங்களில் இருந்து பறித்து, தலைகளைத் துண்டித்து வீசுகிறான். பெற்றத் தாயும் காட்டிற்குள் விரட்டப்படுகிறாள். மேரியின் கண்கள் கண்ணீரைக் கொட்டிச் சிவந்தன. அவர் வெகுண்டு எழுந்தார். வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு உண்மையைச் சொல்லி மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து அவர்களின் அறிவு கண்களைத் திறந்தார். வரும் நாட்களில் அங்கே பிறக்கவிருந்த இரட்டைக் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

     சில நாட்கள் கழித்து மேரி தங்கி இருந்த எக்கனஞ் கிராமத்தில், இரண்டு கூட்டத்தினரிடையே ஒரு நிலத்துக்காக சண்டை நடக்கப்போகிறது என்பதை அறிந்து அங்கே விரைந்து சென்றார். அங்கே குறைந்த பட்சம் 50 பேர்  இரண்டு பக்கத்திலும் கூடி மிகவும் மூர்க்க கோபமாக இருந்தனர். மனதிற்குள்ளே ஜெபித்து தேவ ஞானத்தோடு, சிரிப்பு வரும் வகையில் வேடிக்கையாக சில காரியங்களைப் பேசி சரியான பதில் சொன்னபோது, 'மேரி அம்மா" உங்கள் தீர்ப்புதான் சரியானது. தேவன் உங்களுக்கு நிறைய அறிவு கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் வியந்தனர். இதன் காரணமாக அது முதல் அவரை "அம்மா" என்றும் 'மேரி மா' என்றும் எல்லோரும் விரும்பி அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.  சண்டைக்காகக் காத்திருந்த இரண்டு கூட்டமும் எந்த தகராறும் செய்யாமல் நண்பர்களாக மாறினார்.

      1886 - ல் சவாலான ஒக்கோயோங் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தார். அவரது உண்மையான இரக்கம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் ஆப்ரிக்கர்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றதோடு "ஓகோயோங்கின் வெள்ளை ராணி" என்ற அன்பான பட்டத்தையும் பெற்றார்! 

    ஆப்பிரிக்க மக்கள் எல்லோரும் போதை பொருளுக்கு அடிமையாக, ஏன் பெண்கள் கூட... அனைவருமே 'குடி' மக்களாகவே இருந்தனர். ஒருமுறை இப்படிப்பட்ட பொல்லாத பெண்கள், திருடும் நோக்கத்தில் மேரியை தாக்குவதற்காக வந்தபோது, அவர்களையும் அன்போடு அரவணைத்து இயேசுவின் நற்செய்தியைச் சொல்லி நண்பர்களாகவும், உதவி செய்பவர்களாகவும் அவர்களை மாற்றினார்.

    ஒரு இரவு நேரம், குடிசையின் வெளிப்புறத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்து பார்த்தால், ஒரு கருஞ்சிறுத்தை வாயில் குழந்தையை கவ்விக்கொண்டு வந்தது. இதை பார்த்த மேரி சற்றும் பயமில்லாமல் ஒரு கட்டையை எடுத்து அதன் முகத்தில் அடித்ததும், குழந்தையை போட்டுவிட்டு அது ஓடி விட்டது. சிறிய கீறல் கூட இல்லா அந்த குழந்தையை மேரி எடுத்து வளர்த்தார். இப்படி அநேக குழந்தைகளை குப்பை தொட்டியில் இருந்தும், புதர்களில் இருந்தும் எடுத்து வளர்த்தார். மேரி மா விடம் 51 இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து வந்தனர்.

கிராமத் தலைவன் ஒருவன் இறந்துவிட்டால் அவன் மனைவியையும், பிள்ளைகளையும் அவனோடு சேர்த்து அடக்கம் செய்துவிடுவர். அதோடு கூட அவன் வீட்டில் இருக்கும் அடிமைகளையும் இன்னும் பலரையும் எதிரிகள் வந்து கொலை செய்து விடுவது அங்குள்ள ஒரு மூடப் பழக்கவழக்கம். ஒருமுறை தொலைதூரக் கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து மேரியிடம் தங்கள் கிராமத் தலைவன் சாகும் தருவாயில் இருப்பதாகச் சொல்லி, தாங்கள் வந்து உதவுமாறு கேட்டபோது, அவர் உறைந்து போனதோடு, 8 மணி நேரம் கால் நடையாய் வேதனையோடு அக்கிராமத்திற்கு நடந்து சென்று, அந்த தலைவனுக்காக ஜெபித்து அவனை உயிரோடு காப்பாற்றி, அந்த மூடப் பழக்க வழக்கத்தையும் ஒழித்து கட்ட மிகவும் பாடுபட்டு, அதைத் தடுத்து நிறுத்தினார். ஒருவேளை தலைவன் மரித்து விட்டால் இவர் உயிருக்கும் ஆபத்து இருந்தது. 

ஆரோஸ் என்ற ஒரு இன மக்கள் மிகவும் கொடியவர்கள், தங்கள் ஜனங்களை அடிமைகளாக விற்றுவிடுவார். அதோடு அவர்கள் தங்கள் கடவுளுக்கு மனிதர்களை பலியிடுவதோடு, மனித மாம்சங்களைச் சாப்பிடுபவர்கள். அவர்களுக்காக மேரி இருதயத்தில் பெரிய பாரத்தோடு வெகு நாட்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கிராமத்தில் சுமார் 800 பேரை ஆரோஸ் மக்கள் பிடித்து வைத்து அடிமைகளாக அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானிக்கும்போது, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மேரி, ஆண்டவரின் துணையோடு ஞானத்தோடு செயல்பட்டு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திடம் உதவி கேட்டார். பிரிட்டிஷ் ராணுவ தளபதி உடனடியாக 900 வீரர்களோடு அநேக படகுகளில் அங்கே சென்று அந்த மக்களை பயமுறுத்தி உங்கள் கைகளில் உள்ள துப்பாக்கிகளையும், அடிமைகளையும் ஒப்படையுங்கள் என்று சொன்னபோது, 'இல்லை, அந்த வெள்ளைக்காரி அம்மாவை இங்கே கொண்டுவாருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம்" என்று சொன்னார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் செய்ய முடியாததை மேரிமா செய்து காட்டினதைப் பார்த்து அவர்கள் எல்லோரும் அதிர்ந்துபோயினர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டபோது அந்த கிராமங்களுக்கு ரோடுகள், பள்ளிகள், ஆலயங்கள், மற்றும் மருத்துவமனை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. 1905-ல் அரசாங்கத்திடமிருந்து, தங்களோடு இணைந்து நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிய ஓர் அழைப்பு வந்தது. அதற்கு மாத சம்பளமாக ஒரு பெரும் தொகையைத் தருவதாகவும் வாக்கு அளிக்கப்பட்டது. மேரிக்கு இது  அந்தகாரத்தில் இருந்த ஜனங்களை ஆச்சரியமான ஒளிக்கு அழைத்து வரவும், ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கும் ஒரு நல்ல பாலமாக அமைந்தது.  

அவருக்கு வயது 62, அநேக முறை மலேரியாவால் பாதிக்கப்பட்ட படினாலும், அவர் சரீரத்திலும் முகத்திலும் கட்டிகள் வந்து அவர் அடிக்கடி வியாதிப்பட்டபடினாலும் அவர் மிகவும் சோர்வாகவும், சுகவீனமாகவும் இருந்ததாலும் ஜேனி என்ற பெண்ணின் உதவியால் சக்கர வண்டியில் உட்கார வைத்து எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆப்பிரிக்க மக்களில் அநேக மாற்றங்கள் வந்தபோதும், குடிப்பழக்கம் மட்டும் ஒரு பெரும் சாபமாகவே மாறாமல் இருந்து வந்தது. இதைக் குறியாக வைத்திருந்த மேரிமா அரசாங்க ஆணைக் குழுவிடம் மனு கொடுத்தபோது, வியாபாரிகள் குற்றம் சாட்டினாலும் 'மேரிமா கூறியது தான் சரி" என்று மது விற்பனை முழுவதுமாய் தடை செய்யப்பட்டது. தேவன் வெற்றி சிறந்தார்!!!

    நைஜீரியாவின் கவர்னர் முதல் கீழ் நிலை மக்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் மேரிமாவுக்கு மலர்ச்செண்டுகளை அனுப்பி அன்பையும் மரியாதையையும் தெரிவித்தனர். சக்கர நாற்காலியில் சென்றுகொண்டே மக்களை சந்தித்து ஜெபிப்பதையும் ஆலோசனை கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களினால் அவர் அவதிப்பட்டபோது மருத்துவர் அவரை கடற்கரை ஓரமுள்ள தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்லும்படி கூறினார். இத்தனை வருடங்களும் களிமண் வீட்டில் தான், கிறிஸ்துவைப் போல தாழ்மையானவராகவே வாழ்ந்தார். 1915-ல் தன் நேசர் இயேசுவிடம் சரீர மரணத்தால் சேர்க்கப்பட்டபோது, ஆப்ரிக்க மக்கள் மட்டுமல்ல உலகமே சோகமானது. ஆப்பிரிக்க மக்கள், 'எங்களோடு சாப்பிட்டு, எங்களோடு படுத்து, எங்களுக்காகவே சிறந்த மாதிரியாக வாழ்ந்து காட்டினார் மேரிமா! நர மாமிச பட்சினிகளைக் கூட நல்ல மனிதர்களாக மாற்றினார்!!' என்று சொல்லி அவரைப் புகழ்ந்து பாராட்டினர். 

குட்டிஸ்! உங்களைக் கூட இயேசப்பா இப்படிப்பட்ட வல்லமையான பாத்திரமாக மாற்றி பயன்படுத்த விரும்புகிறார்.... சரிங்களா? 


October 2025

 




ஹாய் குட்டீஸ் ரூ சுட்டீஸ்!  உங்களுக்குச் சொந்தக்காரங்க வீடுகளில் அல்லது எங்கேயாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதா? இரட்டையர்களைப் பார்த்திருக்கீங்களா? நீங்க கூட ஒருவேளை ட்வின்சா பிறந்து இருக்கலாம். பல இரட்டையர்களை நாம் பார்க்கும்போது எவ்வளவு அழகாக, ஒற்றுமையாக யாரிவர் என்று நாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி, அவர்கள் படிப்பிலும் கூட ஒரே மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு என்னே ஆண்டவரின் படைப்பு! சில இரட்டையர்கள் பெரியவர்களானாலும் அப்படியே இருப்பதை நாம் பார்க்கும்போது எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது!! ஆனால் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால், அது பிசாசு கொடுத்த குழந்தைகள் என்று சொல்லி காட்டில் கொண்டுபோய் தூக்கி எறிந்து வீசி கொலை செய்துவிடுவார்கள். அதோடு பெற்றத் தாயையும் காட்டிற்குள் துரத்திவிடுவார்கள். அவர்கள் ஒரு வேளை பசியால் துடி துடித்துச் சாகலாம் அல்லது காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படலாம். அன்பு பிள்ளைகளே! அது உங்களுக்கு தெரியுமா? ஐயோ பாவம்! என்ன பரிதாபம் பார்த்தீங்களா குட்டீஸ்!! ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் ஆண்டவர் அனுப்பி வைத்த ஒரு 'அம்மா" செய்த சீர்திருத்தங்களையும், மிஷனரி ஊழியத்தையும் தான் இங்கே நாம் பார்க்கப் போறோம்.... சரிங்களா?

ஆப்பிரிக்கா கண்டத்தை இருண்ட கண்டம் என்று சொல்லுவாங்க. ஆனால், அங்கே  முதலில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கே அப்போஸ்தலனாக, மிஷனரியாகக் கடந்து சென்றவர் தான் டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரி. அவர் இப்போது அங்கே விதையாக மரித்துவிட்டார். இதனால் அங்கே ஒரு காலியிடம் உருவாகியிருக்கிறது. இப்போது 'அவர் செய்த ஊழியத்தைச் செய்வதற்கு அங்கே யாருமே இல்லையா?' அப்படின்னு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. வேறு எந்த விதத்திலும் ஆப்பிரிக்கா செல்வதற்கு வழி இல்லாவிட்டால் கடலில் நீந்தியாவது நான் சென்று விடுவேன் என்று வீரமுழக்கமிட்டவர் இந்த வீரப் பெண்மணி!

 ஸ்காட்லாந்து தேசத்திலே அபர்டீன் என்னுமிடத்தில், டிசம்பர் 2, 1848- ல் செருப்பு தைக்கும் ஒரு குடிகாரத் தகப்பன், ஆனால் மிகவும் பக்தி உள்ள ஒரு தாய் இவர்களுக்கு மகளாக மேரி ஸ்லேசர் பிறக்கிறார். வறுமையால் வாடும் இவர்களுக்கு சில பிள்ளைகள்; இதில் மூத்தவர் ராபர்ட், இரண்டாவது மேரி. சனிக்கிழமை என்றாலே முழு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு நன்றாக குடித்து வெறித்து, சிக்கன் மட்டன் என்று நன்றாகச் சாப்பிட்டு, சம்பளத்தை எல்லாம் விருதாவாக வீசிவிட்டு, வீட்டிற்கு வரும் அப்பாவைப் பார்க்க எல்லா பிள்ளைகளும் பயந்து நடுங்கி ஆங்காங்கே ஒளிந்துக் கொள்ளுவர். ஒருமுறை வீட்டில் சாப்பாட்டுத் தட்டை காலால் உதைத்து வீசி எறிந்தபோது, 'ஏன் அப்பா இப்படி......?" என்று அன்று மேரி கேட்டதினால் தன் தந்தையால் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டு, ஒரு குளிர்கால இரவு முழுவதும் அழுது கொண்டே கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு, முழு இரவையும் வெளியே கழிக்க வேண்டியதாயிற்று. பக்தி நிறைந்த தாயோ, தன் செல்லப் பிள்ளைகளைப் பக்கத்தில் அமர வைத்து அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்ததோடு மிஷனரிகளின் சரித்திரங்களையும் அவர் சொல்லித் தருகிறார்.       

     டண்டி (Dundee) எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது, ஒரு வயதான பாட்டி சிறுபிள்ளைகளை அழைத்து, தின்பண்டங்கள் கொடுத்து, குளிர் காயவும் உதவுவார்கள். சிறு பிள்ளைகளுடன் கிறிஸ்துவின் அன்பை எப்படிச் சொல்வது என்று அந்த பாட்டிக்குத் தெரியாது ஆனாலும் அவர்கள், 'நீ உன் பாவங்களை விட்டு மனம் திரும்பாவிட்டால் தண்டனை பெறுவாய்' என்று கூறி பயமுறுத்தினார்கள். தன் பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்து, 'இயேசுவே என்னையும் உன் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும்.' என்று ஜெபித்த மேரி அன்றிலிருந்து இயேசுவின் பிள்ளையாக மாறினாள். ஒரு முறை மேரியின் தாய், ஆப்பிரிக்கக் கண்டத்திலே மிஷனரியாக பணி செய்த டேவிட் லிவிங்ஸ்டனைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் அழகாகச் சொல்லி, அவருடைய இருதயம் அங்கே விதைக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் தாங்களும் பெரியவர்களாகும் போது மிஷனரிகளாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்கின்றனர். மேரி தனது அண்ணன் ராபர்ட் கண்டிப்பாக மிஷனரியாகச் செல்வார் என்று நினைக்கிறார்.

      தந்தையின் குடிப்பழக்கத்தினால் குடும்பம் உறுதியற்ற தன்மையிலும் அதிக சவால்கள் நிறைந்தும் காணப்பட்ட போதும், மேரியின் தாய் பிள்ளைகளுக்குள் அதிக வலுவான கிறிஸ்தவ நம்பிக்கையை விதைத்தார். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமானதாக இருந்தது.

தனது பதினோராவது வயதிலே குடும்ப பாரம்  அதிகமானபடியினால், ஓர் ஆலையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் மேரி. மேரிக்கு அப்போது வயது 14.  திடீரென்று அந்த குடும்பத்தில் இடி விழுந்தது போன்று குடிபோதையில் தூக்கத்திலே மரித்துப்போன தந்தை, அதோடு ராபர்ட் என்ற மூத்த சகோதரனையும் இன்னும் ஒரு சகோதரனையும் மரணத்தில் இழக்க வேண்டியது வந்தது. 




SEP 2025

 




இங்கிலாந்து தேசத்தில், கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து,  வேத அறிவையும் கூடவே பெற்றிருந்த ஹட்சன் டெய்லர், 'நான் பெரியவனாகிப் படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்" என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டதையும், 'சீன தேசத்திற்கு நீ செல்லவேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்று தேவன் அவரோடு  இடைபட்டதையும், அப்பணிக்காக மருத்துவம் பயின்று, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைக் கற்று அவர் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததையும் மற்றும் ஆறு மாதங்கள் தொடர் கடல்பிரயாணம் செய்து, சீன மண்ணில் கால் பதித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினதையும் கடந்த இதழ்களில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சீனாவில் தொடர்ந்து அவர் செய்த ஊழியங்களைக் குறித்து காண்போமா? 

    ஹட்சன் டெய்லர் சீனாவில் தொடர்ந்து ஊழியம் செய்துவந்த நாட்களில், தனது நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணை மணந்துகொண்டு  ஊழியத்தில் முன்னேறிச் சென்றார். ஒருமுறை, சீனாவில், நிங்போ மொழியில் ஓர் புதிய ஏற்பாடு ஹட்சன் டெய்லரின் கைகளில் கிடைத்தபோது, அவர் அதை வாசித்து, சில திருத்தங்களையும் அதில் செய்துகொடுத்தார்.  

தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் இடைவிடாத ஊழியங்களைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் கழித்து தன் சொந்த நாடு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு இருந்த நாட்களில், அங்குள்ளவர்களிடம் சீன தேசத்தின் தேவையைப் பற்றியும் மற்றும் அங்குள்ள எண்ணற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மிஷனரி கூட இல்லை என்பதையும் கைப்பிரதிகள் (ீயஅிாடநவள) மூலமாகத் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். தேவனுடைய தீர்மானத்தின்படியே பத்து பவுண்டு என்ற ஒரு சிறு தொகையைக் கொண்டு "சீன உள்நாட்டு மிஷன்" ஸ்தாபிக்கப்பட்டது. 16 புதிய மிஷனரிகள் சீன நாட்டை நோக்கி பயணமாயினர். கப்பல் பிரயாணத்தில் கப்பல் ஊழியர்களையும் கிறிஸ்துவுக்கு என்று ஆதாயப்படுத்த தேவ கிருபை கிடைத்தது. "தன் வீட்டிலும், சொந்த நாட்டிலும் பயன்படாத ஒருவர், அயல் நாட்டிலும் கிறிஸ்துவின் பணியில் பயன்பட முடியாது. ஒரு மிஷனரி கடல் கடந்து செல்வதால் மட்டும் உருவாகிவிட முடியாது." என்று ஹட்சன் சொல்வார். 

சீன உள்நாட்டு மிஷன் 20 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வளர்ந்து, விரிந்து பெருகியது. இந்நிலையில், 12 ஆண்டுகள் அவரோடு இணைந்து நின்ற அவரது அன்பு மனைவி காலரா நோயினால் மரித்துப் போனார். அதோடு இல்லாமல் கர்த்தர் கொடுத்த நான்கு பிள்ளைகளும் இறந்தனர். "தொடர்ச்சியான இழப்புகளினால் இதயங்கள் வெடித்துச் சிதறினாலும் இயேசுவோ எல்லாவற்றிலும் உயர்ந்து நின்றார்! 'நான் தனித்து விடப்பட்டவன் அல்லளூ முன்பைக்காட்டிலும் கர்த்தரோடு அதிக நெருக்கமாக உள்ளேன்' என்று இந்தச் சூழ்நிலையின் மத்தியிலும் அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? 

மேலும் வியாதி ஒரு பக்கம், தேவை மறுபக்கம்! இதன் நடுவிலும் யாரிடமோ காணிக்கைத் தாருங்கள் என்று கேட்கத் தேவையில்லாதபடிக்கு, சீன உள்நாட்டு மிஷனை தேவன் அருமையாக நடத்திவந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை சொன்ன போதும் பணத்தைப் பற்றி அவர் பேசவே இல்லை.

முதுகெலும்பில் வியாதிப்பட்டு பல நாட்கள் படுக்கையில் இருந்த போது ஆண்டவர் அவருக்கு வரும் நாட்களைப் பற்றிய அருமையான  தரிசனங்களைத் தந்தார். 

இறுதியில், இதுவரை சென்றிராத சீனாவின் கடைசி மாநிலத்தின் தலைநகரமான சாங்ஷாவிலிருந்து ஊழியம் செய்ய அவர் விரும்பினார். ஆயினும், 1905 ஆம் ஆண்டு அந்த இடத்திற்குச் சென்று ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே தன் வெற்றிகரமான ஓட்டத்தை முடித்து பரலோகம் சென்றுவிட்டார். சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தில் அப்போது 850 மிஷனரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 205 பணித்தளங்கள் மற்றும்  ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன கிறிஸ்தவர்களும் காணப்பட்டனர். சீன நாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது.

இது நடக்கவே நடக்காது ஒருவரும் செய்யமுடியாது என்று மனுஷன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் சிரிக்கும். கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவராமல் கீழ்ப்படிந்து, தேவனின் சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்.' என்று ஹட்சன் டெய்லர் எப்போதும் சொல்வார். சீன இன்லன்ட் மிஷன் மற்ற மிஷனரி சங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது. ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் இயேசு கிறிஸ்துவின் சீடரைப் போன்றே ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சீனாவின் முன்னோடி மிஷனரியாகவும் அப்போஸ்தலராகவும் அழைக்கப்பட்ட இவர், 'சீனாவின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டார். நற்செய்தி பணியில் ஒரு தந்தையாக நாம் அவரை பார்க்க முடியும்.

நாம் பரலோகத்திற்கு போகும்போது ஒரு பெரும் கூட்டம் சீன மக்கள் ஹட்சன் டெய்லரைப் பார்த்து, உற்சாகமாய் அவரை வரவேற்று "நீர் பாக்கியவான்" என்று சொல்வார்கள் அல்லவா..? 

ஆமா! குட்டி குட்டிப் பிள்ளைகளே!! ஹட்சன் டெய்லரைப் போல உங்களையும் நம் அன்பு ஆண்டவர் அழைத்தால் என்ன சொல்லப் போகிறீர்கள்...?