இங்கிலாந்து தேசத்தில், கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, வேத அறிவையும் கூடவே பெற்றிருந்த ஹட்சன் டெய்லர், 'நான் பெரியவனாகிப் படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்" என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டதையும், 'சீன தேசத்திற்கு நீ செல்லவேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்று தேவன் அவரோடு இடைபட்டதையும், அப்பணிக்காக மருத்துவம் பயின்று, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைக் கற்று அவர் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததையும் மற்றும் ஆறு மாதங்கள் தொடர் கடல்பிரயாணம் செய்து, சீன மண்ணில் கால் பதித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினதையும் கடந்த இதழ்களில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சீனாவில் தொடர்ந்து அவர் செய்த ஊழியங்களைக் குறித்து காண்போமா?
ஹட்சன் டெய்லர் சீனாவில் தொடர்ந்து ஊழியம் செய்துவந்த நாட்களில், தனது நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணை மணந்துகொண்டு ஊழியத்தில் முன்னேறிச் சென்றார். ஒருமுறை, சீனாவில், நிங்போ மொழியில் ஓர் புதிய ஏற்பாடு ஹட்சன் டெய்லரின் கைகளில் கிடைத்தபோது, அவர் அதை வாசித்து, சில திருத்தங்களையும் அதில் செய்துகொடுத்தார்.
தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் இடைவிடாத ஊழியங்களைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் கழித்து தன் சொந்த நாடு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு இருந்த நாட்களில், அங்குள்ளவர்களிடம் சீன தேசத்தின் தேவையைப் பற்றியும் மற்றும் அங்குள்ள எண்ணற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மிஷனரி கூட இல்லை என்பதையும் கைப்பிரதிகள் (Phயஅடநவள) மூலமாகத் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். தேவனுடைய தீர்மானத்தின்படியே பத்து பவுண்டு என்ற ஒரு சிறு தொகையைக் கொண்டு "சீன உள்நாட்டு மிஷன்" ஸ்தாபிக்கப்பட்டது. 16 புதிய மிஷனரிகள் சீன நாட்டை நோக்கி பயணமாயினர். கப்பல் பிரயாணத்தில் கப்பல் ஊழியர்களையும் கிறிஸ்துவுக்கு என்று ஆதாயப்படுத்த தேவ கிருபை கிடைத்தது. "தன் வீட்டிலும், சொந்த நாட்டிலும் பயன்படாத ஒருவர், அயல் நாட்டிலும் கிறிஸ்துவின் பணியில் பயன்பட முடியாது. ஒரு மிஷனரி கடல் கடந்து செல்வதால் மட்டும் உருவாகிவிட முடியாது." என்று ஹட்சன் சொல்வார்.
சீன உள்நாட்டு மிஷன் 20 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வளர்ந்து, விரிந்து பெருகியது. இந்நிலையில், 12 ஆண்டுகள் அவரோடு இணைந்து நின்ற அவரது அன்பு மனைவி காலரா நோயினால் மரித்துப் போனார். அதோடு இல்லாமல் கர்த்தர் கொடுத்த நான்கு பிள்ளைகளும் இறந்தனர். "தொடர்ச்சியான இழப்புகளினால் இதயங்கள் வெடித்துச் சிதறினாலும் இயேசுவோ எல்லாவற்றிலும் உயர்ந்து நின்றார்! 'நான் தனித்து விடப்பட்டவன் அல்ல முன்னைக்காட்டிலும் கர்த்தரோடு அதிக நெருக்கமாக உள்ளேன்' என்று இந்தச் சூழ்நிலையின் மத்தியிலும் அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது?
மேலும் வியாதி ஒரு பக்கம், தேவை மறுபக்கம்! இதன் நடுவிலும் யாரிடமோ காணிக்கைத் தாருங்கள் என்று கேட்கத் தேவையில்லாதபடிக்கு, சீன உள்நாட்டு மிஷனை தேவன் அருமையாக நடத்திவந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை சொன்ன போதும் பணத்தைப் பற்றி அவர் பேசவே இல்லை.
முதுகெலும்பில் வியாதிப்பட்டு பல நாட்கள் படுக்கையில் இருந்த போது ஆண்டவர் அவருக்கு வரும் நாட்களைப் பற்றிய அருமையான தரிசனங்களைத் தந்தார்.
இறுதியில், இதுவரை சென்றிராத சீனாவின் கடைசி மாநிலத்தின் தலைநகரமான சாங்ஷாவிலிருந்து ஊழியம் செய்ய அவர் விரும்பினார். ஆயினும், 1905 ஆம் ஆண்டு அந்த இடத்திற்குச் சென்று ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே தன் வெற்றிகரமான ஓட்டத்தை முடித்து பரலோகம் சென்றுவிட்டார். சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தில் அப்போது 850 மிஷனரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 205 பணித்தளங்கள் மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன கிறிஸ்தவர்களும் காணப்பட்டனர். சீன நாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது.
இது நடக்கவே நடக்காது ஒருவரும் செய்யமுடியாது என்று மனுஷன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் சிரிக்கும். கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவராமல் கீழ்ப்படிந்து, தேவனின் சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்.' என்று ஹட்சன் டெய்லர் எப்போதும் சொல்வார். சீன இன்லன்ட் மிஷன் மற்ற மிஷனரி சங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது. ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் இயேசு கிறிஸ்துவின் சீடரைப் போன்றே ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சீனாவின் முன்னோடி மிஷனரியாகவும் அப்போஸ்தலராகவும் அழைக்கப்பட்ட இவர், 'சீனாவின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டார். நற்செய்தி பணியில் ஒரு தந்தையாக நாம் அவரை பார்க்க முடியும்.
நாம் பரலோகத்திற்கு போகும்போது ஒரு பெரும் கூட்டம் சீன மக்கள் ஹட்சன் டெய்லரைப் பார்த்து, உற்சாகமாய் அவரை வரவேற்று "நீர் பாக்கியவான்" என்று சொல்வார்கள் அல்லவா..?
ஆமா! குட்டி குட்டிப் பிள்ளைகளே!! ஹட்சன் டெய்லரைப் போல உங்களையும் நம் அன்பு ஆண்டவர் அழைத்தால் என்ன சொல்லப் போகிறீர்கள்...?