November 2025

 











    ஸ்காட்லாந்து தேசத்தில் வறுமையான ஒரு குடும்பத்தில் குடிகாரத் தகப்பனுக்கும் பக்தியான தாய்க்கும் இரண்டாவது மகளாகப் பிறந்து, தந்தையின் பல துன்பங்களின் மத்தியிலும் தாயின் அன்பினால் வேதத்தின் வழியில் நடத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தந்தை மற்றும் சகோதரர்களின் மரணத்தின் மத்தியிலும் கிறிஸ்துவுக்காய் ஊழியம் செய்யத் தொடங்கி, தனது 28-ம் வயதில் நைஜீரிபாவுக்கு மிஷனரியாகப் புறப்பட்டுச் சென்ற மேரி மிட்செல் ஸ்லெசரைக் குறித்து கடந்த இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவர் நைஜீரியாவில் செய்த ஊழியத்தைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா? 

இன்றைய நைஜீரியாவின் காலாபர் நதி பாயும் இடம். மனிதர்கள் அங்கு மனிதர்களாகவே இல்லை, வாழ்க்கைக்கான சட்டமில்லை, வாழ்க்கை முறையும் இல்லை. மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஒரு தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காயும் முன்பே, அக்குழந்தைகள் அழும் சத்தம் வருவதற்கு முன்பே, கொடூரன் ஒருவன் மூர்க்கமாய்க் குழந்தைகளை தாயின் கரங்களில் இருந்து பறித்து, தலைகளைத் துண்டித்து வீசுகிறான். பெற்றத் தாயும் காட்டிற்குள் விரட்டப்படுகிறாள். மேரியின் கண்கள் கண்ணீரைக் கொட்டிச் சிவந்தன. அவர் வெகுண்டு எழுந்தார். வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு உண்மையைச் சொல்லி மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து அவர்களின் அறிவு கண்களைத் திறந்தார். வரும் நாட்களில் அங்கே பிறக்கவிருந்த இரட்டைக் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

     சில நாட்கள் கழித்து மேரி தங்கி இருந்த எக்கனஞ் கிராமத்தில், இரண்டு கூட்டத்தினரிடையே ஒரு நிலத்துக்காக சண்டை நடக்கப்போகிறது என்பதை அறிந்து அங்கே விரைந்து சென்றார். அங்கே குறைந்த பட்சம் 50 பேர்  இரண்டு பக்கத்திலும் கூடி மிகவும் மூர்க்க கோபமாக இருந்தனர். மனதிற்குள்ளே ஜெபித்து தேவ ஞானத்தோடு, சிரிப்பு வரும் வகையில் வேடிக்கையாக சில காரியங்களைப் பேசி சரியான பதில் சொன்னபோது, 'மேரி அம்மா" உங்கள் தீர்ப்புதான் சரியானது. தேவன் உங்களுக்கு நிறைய அறிவு கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் வியந்தனர். இதன் காரணமாக அது முதல் அவரை "அம்மா" என்றும் 'மேரி மா' என்றும் எல்லோரும் விரும்பி அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.  சண்டைக்காகக் காத்திருந்த இரண்டு கூட்டமும் எந்த தகராறும் செய்யாமல் நண்பர்களாக மாறினார்.

      1886 - ல் சவாலான ஒக்கோயோங் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தார். அவரது உண்மையான இரக்கம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் ஆப்ரிக்கர்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றதோடு "ஓகோயோங்கின் வெள்ளை ராணி" என்ற அன்பான பட்டத்தையும் பெற்றார்! 

    ஆப்பிரிக்க மக்கள் எல்லோரும் போதை பொருளுக்கு அடிமையாக, ஏன் பெண்கள் கூட... அனைவருமே 'குடி' மக்களாகவே இருந்தனர். ஒருமுறை இப்படிப்பட்ட பொல்லாத பெண்கள், திருடும் நோக்கத்தில் மேரியை தாக்குவதற்காக வந்தபோது, அவர்களையும் அன்போடு அரவணைத்து இயேசுவின் நற்செய்தியைச் சொல்லி நண்பர்களாகவும், உதவி செய்பவர்களாகவும் அவர்களை மாற்றினார்.

    ஒரு இரவு நேரம், குடிசையின் வெளிப்புறத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்து பார்த்தால், ஒரு கருஞ்சிறுத்தை வாயில் குழந்தையை கவ்விக்கொண்டு வந்தது. இதை பார்த்த மேரி சற்றும் பயமில்லாமல் ஒரு கட்டையை எடுத்து அதன் முகத்தில் அடித்ததும், குழந்தையை போட்டுவிட்டு அது ஓடி விட்டது. சிறிய கீறல் கூட இல்லா அந்த குழந்தையை மேரி எடுத்து வளர்த்தார். இப்படி அநேக குழந்தைகளை குப்பை தொட்டியில் இருந்தும், புதர்களில் இருந்தும் எடுத்து வளர்த்தார். மேரி மா விடம் 51 இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து வந்தனர்.

கிராமத் தலைவன் ஒருவன் இறந்துவிட்டால் அவன் மனைவியையும், பிள்ளைகளையும் அவனோடு சேர்த்து அடக்கம் செய்துவிடுவர். அதோடு கூட அவன் வீட்டில் இருக்கும் அடிமைகளையும் இன்னும் பலரையும் எதிரிகள் வந்து கொலை செய்து விடுவது அங்குள்ள ஒரு மூடப் பழக்கவழக்கம். ஒருமுறை தொலைதூரக் கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து மேரியிடம் தங்கள் கிராமத் தலைவன் சாகும் தருவாயில் இருப்பதாகச் சொல்லி, தாங்கள் வந்து உதவுமாறு கேட்டபோது, அவர் உறைந்து போனதோடு, 8 மணி நேரம் கால் நடையாய் வேதனையோடு அக்கிராமத்திற்கு நடந்து சென்று, அந்த தலைவனுக்காக ஜெபித்து அவனை உயிரோடு காப்பாற்றி, அந்த மூடப் பழக்க வழக்கத்தையும் ஒழித்து கட்ட மிகவும் பாடுபட்டு, அதைத் தடுத்து நிறுத்தினார். ஒருவேளை தலைவன் மரித்து விட்டால் இவர் உயிருக்கும் ஆபத்து இருந்தது. 

ஆரோஸ் என்ற ஒரு இன மக்கள் மிகவும் கொடியவர்கள், தங்கள் ஜனங்களை அடிமைகளாக விற்றுவிடுவார். அதோடு அவர்கள் தங்கள் கடவுளுக்கு மனிதர்களை பலியிடுவதோடு, மனித மாம்சங்களைச் சாப்பிடுபவர்கள். அவர்களுக்காக மேரி இருதயத்தில் பெரிய பாரத்தோடு வெகு நாட்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கிராமத்தில் சுமார் 800 பேரை ஆரோஸ் மக்கள் பிடித்து வைத்து அடிமைகளாக அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானிக்கும்போது, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மேரி, ஆண்டவரின் துணையோடு ஞானத்தோடு செயல்பட்டு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திடம் உதவி கேட்டார். பிரிட்டிஷ் ராணுவ தளபதி உடனடியாக 900 வீரர்களோடு அநேக படகுகளில் அங்கே சென்று அந்த மக்களை பயமுறுத்தி உங்கள் கைகளில் உள்ள துப்பாக்கிகளையும், அடிமைகளையும் ஒப்படையுங்கள் என்று சொன்னபோது, 'இல்லை, அந்த வெள்ளைக்காரி அம்மாவை இங்கே கொண்டுவாருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம்" என்று சொன்னார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் செய்ய முடியாததை மேரிமா செய்து காட்டினதைப் பார்த்து அவர்கள் எல்லோரும் அதிர்ந்துபோயினர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டபோது அந்த கிராமங்களுக்கு ரோடுகள், பள்ளிகள், ஆலயங்கள், மற்றும் மருத்துவமனை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. 1905-ல் அரசாங்கத்திடமிருந்து, தங்களோடு இணைந்து நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிய ஓர் அழைப்பு வந்தது. அதற்கு மாத சம்பளமாக ஒரு பெரும் தொகையைத் தருவதாகவும் வாக்கு அளிக்கப்பட்டது. மேரிக்கு இது  அந்தகாரத்தில் இருந்த ஜனங்களை ஆச்சரியமான ஒளிக்கு அழைத்து வரவும், ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கும் ஒரு நல்ல பாலமாக அமைந்தது.  

அவருக்கு வயது 62, அநேக முறை மலேரியாவால் பாதிக்கப்பட்ட படினாலும், அவர் சரீரத்திலும் முகத்திலும் கட்டிகள் வந்து அவர் அடிக்கடி வியாதிப்பட்டபடினாலும் அவர் மிகவும் சோர்வாகவும், சுகவீனமாகவும் இருந்ததாலும் ஜேனி என்ற பெண்ணின் உதவியால் சக்கர வண்டியில் உட்கார வைத்து எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆப்பிரிக்க மக்களில் அநேக மாற்றங்கள் வந்தபோதும், குடிப்பழக்கம் மட்டும் ஒரு பெரும் சாபமாகவே மாறாமல் இருந்து வந்தது. இதைக் குறியாக வைத்திருந்த மேரிமா அரசாங்க ஆணைக் குழுவிடம் மனு கொடுத்தபோது, வியாபாரிகள் குற்றம் சாட்டினாலும் 'மேரிமா கூறியது தான் சரி" என்று மது விற்பனை முழுவதுமாய் தடை செய்யப்பட்டது. தேவன் வெற்றி சிறந்தார்!!!

    நைஜீரியாவின் கவர்னர் முதல் கீழ் நிலை மக்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் மேரிமாவுக்கு மலர்ச்செண்டுகளை அனுப்பி அன்பையும் மரியாதையையும் தெரிவித்தனர். சக்கர நாற்காலியில் சென்றுகொண்டே மக்களை சந்தித்து ஜெபிப்பதையும் ஆலோசனை கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களினால் அவர் அவதிப்பட்டபோது மருத்துவர் அவரை கடற்கரை ஓரமுள்ள தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்லும்படி கூறினார். இத்தனை வருடங்களும் களிமண் வீட்டில் தான், கிறிஸ்துவைப் போல தாழ்மையானவராகவே வாழ்ந்தார். 1915-ல் தன் நேசர் இயேசுவிடம் சரீர மரணத்தால் சேர்க்கப்பட்டபோது, ஆப்ரிக்க மக்கள் மட்டுமல்ல உலகமே சோகமானது. ஆப்பிரிக்க மக்கள், 'எங்களோடு சாப்பிட்டு, எங்களோடு படுத்து, எங்களுக்காகவே சிறந்த மாதிரியாக வாழ்ந்து காட்டினார் மேரிமா! நர மாமிச பட்சினிகளைக் கூட நல்ல மனிதர்களாக மாற்றினார்!!' என்று சொல்லி அவரைப் புகழ்ந்து பாராட்டினர். 

குட்டிஸ்! உங்களைக் கூட இயேசப்பா இப்படிப்பட்ட வல்லமையான பாத்திரமாக மாற்றி பயன்படுத்த விரும்புகிறார்.... சரிங்களா? 


October 2025

 




ஹாய் குட்டீஸ் ரூ சுட்டீஸ்!  உங்களுக்குச் சொந்தக்காரங்க வீடுகளில் அல்லது எங்கேயாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதா? இரட்டையர்களைப் பார்த்திருக்கீங்களா? நீங்க கூட ஒருவேளை ட்வின்சா பிறந்து இருக்கலாம். பல இரட்டையர்களை நாம் பார்க்கும்போது எவ்வளவு அழகாக, ஒற்றுமையாக யாரிவர் என்று நாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி, அவர்கள் படிப்பிலும் கூட ஒரே மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு என்னே ஆண்டவரின் படைப்பு! சில இரட்டையர்கள் பெரியவர்களானாலும் அப்படியே இருப்பதை நாம் பார்க்கும்போது எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது!! ஆனால் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால், அது பிசாசு கொடுத்த குழந்தைகள் என்று சொல்லி காட்டில் கொண்டுபோய் தூக்கி எறிந்து வீசி கொலை செய்துவிடுவார்கள். அதோடு பெற்றத் தாயையும் காட்டிற்குள் துரத்திவிடுவார்கள். அவர்கள் ஒரு வேளை பசியால் துடி துடித்துச் சாகலாம் அல்லது காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படலாம். அன்பு பிள்ளைகளே! அது உங்களுக்கு தெரியுமா? ஐயோ பாவம்! என்ன பரிதாபம் பார்த்தீங்களா குட்டீஸ்!! ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் ஆண்டவர் அனுப்பி வைத்த ஒரு 'அம்மா" செய்த சீர்திருத்தங்களையும், மிஷனரி ஊழியத்தையும் தான் இங்கே நாம் பார்க்கப் போறோம்.... சரிங்களா?

ஆப்பிரிக்கா கண்டத்தை இருண்ட கண்டம் என்று சொல்லுவாங்க. ஆனால், அங்கே  முதலில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கே அப்போஸ்தலனாக, மிஷனரியாகக் கடந்து சென்றவர் தான் டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரி. அவர் இப்போது அங்கே விதையாக மரித்துவிட்டார். இதனால் அங்கே ஒரு காலியிடம் உருவாகியிருக்கிறது. இப்போது 'அவர் செய்த ஊழியத்தைச் செய்வதற்கு அங்கே யாருமே இல்லையா?' அப்படின்னு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. வேறு எந்த விதத்திலும் ஆப்பிரிக்கா செல்வதற்கு வழி இல்லாவிட்டால் கடலில் நீந்தியாவது நான் சென்று விடுவேன் என்று வீரமுழக்கமிட்டவர் இந்த வீரப் பெண்மணி!

 ஸ்காட்லாந்து தேசத்திலே அபர்டீன் என்னுமிடத்தில், டிசம்பர் 2, 1848- ல் செருப்பு தைக்கும் ஒரு குடிகாரத் தகப்பன், ஆனால் மிகவும் பக்தி உள்ள ஒரு தாய் இவர்களுக்கு மகளாக மேரி ஸ்லேசர் பிறக்கிறார். வறுமையால் வாடும் இவர்களுக்கு சில பிள்ளைகள்; இதில் மூத்தவர் ராபர்ட், இரண்டாவது மேரி. சனிக்கிழமை என்றாலே முழு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு நன்றாக குடித்து வெறித்து, சிக்கன் மட்டன் என்று நன்றாகச் சாப்பிட்டு, சம்பளத்தை எல்லாம் விருதாவாக வீசிவிட்டு, வீட்டிற்கு வரும் அப்பாவைப் பார்க்க எல்லா பிள்ளைகளும் பயந்து நடுங்கி ஆங்காங்கே ஒளிந்துக் கொள்ளுவர். ஒருமுறை வீட்டில் சாப்பாட்டுத் தட்டை காலால் உதைத்து வீசி எறிந்தபோது, 'ஏன் அப்பா இப்படி......?" என்று அன்று மேரி கேட்டதினால் தன் தந்தையால் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டு, ஒரு குளிர்கால இரவு முழுவதும் அழுது கொண்டே கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு, முழு இரவையும் வெளியே கழிக்க வேண்டியதாயிற்று. பக்தி நிறைந்த தாயோ, தன் செல்லப் பிள்ளைகளைப் பக்கத்தில் அமர வைத்து அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்ததோடு மிஷனரிகளின் சரித்திரங்களையும் அவர் சொல்லித் தருகிறார்.       

     டண்டி (Dundee) எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது, ஒரு வயதான பாட்டி சிறுபிள்ளைகளை அழைத்து, தின்பண்டங்கள் கொடுத்து, குளிர் காயவும் உதவுவார்கள். சிறு பிள்ளைகளுடன் கிறிஸ்துவின் அன்பை எப்படிச் சொல்வது என்று அந்த பாட்டிக்குத் தெரியாது ஆனாலும் அவர்கள், 'நீ உன் பாவங்களை விட்டு மனம் திரும்பாவிட்டால் தண்டனை பெறுவாய்' என்று கூறி பயமுறுத்தினார்கள். தன் பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்து, 'இயேசுவே என்னையும் உன் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும்.' என்று ஜெபித்த மேரி அன்றிலிருந்து இயேசுவின் பிள்ளையாக மாறினாள். ஒரு முறை மேரியின் தாய், ஆப்பிரிக்கக் கண்டத்திலே மிஷனரியாக பணி செய்த டேவிட் லிவிங்ஸ்டனைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் அழகாகச் சொல்லி, அவருடைய இருதயம் அங்கே விதைக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் தாங்களும் பெரியவர்களாகும் போது மிஷனரிகளாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்கின்றனர். மேரி தனது அண்ணன் ராபர்ட் கண்டிப்பாக மிஷனரியாகச் செல்வார் என்று நினைக்கிறார்.

      தந்தையின் குடிப்பழக்கத்தினால் குடும்பம் உறுதியற்ற தன்மையிலும் அதிக சவால்கள் நிறைந்தும் காணப்பட்ட போதும், மேரியின் தாய் பிள்ளைகளுக்குள் அதிக வலுவான கிறிஸ்தவ நம்பிக்கையை விதைத்தார். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமானதாக இருந்தது.

தனது பதினோராவது வயதிலே குடும்ப பாரம்  அதிகமானபடியினால், ஓர் ஆலையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் மேரி. மேரிக்கு அப்போது வயது 14.  திடீரென்று அந்த குடும்பத்தில் இடி விழுந்தது போன்று குடிபோதையில் தூக்கத்திலே மரித்துப்போன தந்தை, அதோடு ராபர்ட் என்ற மூத்த சகோதரனையும் இன்னும் ஒரு சகோதரனையும் மரணத்தில் இழக்க வேண்டியது வந்தது. 




SEP 2025

 




இங்கிலாந்து தேசத்தில், கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து,  வேத அறிவையும் கூடவே பெற்றிருந்த ஹட்சன் டெய்லர், 'நான் பெரியவனாகிப் படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்" என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டதையும், 'சீன தேசத்திற்கு நீ செல்லவேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்று தேவன் அவரோடு  இடைபட்டதையும், அப்பணிக்காக மருத்துவம் பயின்று, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைக் கற்று அவர் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததையும் மற்றும் ஆறு மாதங்கள் தொடர் கடல்பிரயாணம் செய்து, சீன மண்ணில் கால் பதித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினதையும் கடந்த இதழ்களில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சீனாவில் தொடர்ந்து அவர் செய்த ஊழியங்களைக் குறித்து காண்போமா? 

    ஹட்சன் டெய்லர் சீனாவில் தொடர்ந்து ஊழியம் செய்துவந்த நாட்களில், தனது நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணை மணந்துகொண்டு  ஊழியத்தில் முன்னேறிச் சென்றார். ஒருமுறை, சீனாவில், நிங்போ மொழியில் ஓர் புதிய ஏற்பாடு ஹட்சன் டெய்லரின் கைகளில் கிடைத்தபோது, அவர் அதை வாசித்து, சில திருத்தங்களையும் அதில் செய்துகொடுத்தார்.  

தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் இடைவிடாத ஊழியங்களைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் கழித்து தன் சொந்த நாடு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு இருந்த நாட்களில், அங்குள்ளவர்களிடம் சீன தேசத்தின் தேவையைப் பற்றியும் மற்றும் அங்குள்ள எண்ணற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மிஷனரி கூட இல்லை என்பதையும் கைப்பிரதிகள் (ீயஅிாடநவள) மூலமாகத் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். தேவனுடைய தீர்மானத்தின்படியே பத்து பவுண்டு என்ற ஒரு சிறு தொகையைக் கொண்டு "சீன உள்நாட்டு மிஷன்" ஸ்தாபிக்கப்பட்டது. 16 புதிய மிஷனரிகள் சீன நாட்டை நோக்கி பயணமாயினர். கப்பல் பிரயாணத்தில் கப்பல் ஊழியர்களையும் கிறிஸ்துவுக்கு என்று ஆதாயப்படுத்த தேவ கிருபை கிடைத்தது. "தன் வீட்டிலும், சொந்த நாட்டிலும் பயன்படாத ஒருவர், அயல் நாட்டிலும் கிறிஸ்துவின் பணியில் பயன்பட முடியாது. ஒரு மிஷனரி கடல் கடந்து செல்வதால் மட்டும் உருவாகிவிட முடியாது." என்று ஹட்சன் சொல்வார். 

சீன உள்நாட்டு மிஷன் 20 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வளர்ந்து, விரிந்து பெருகியது. இந்நிலையில், 12 ஆண்டுகள் அவரோடு இணைந்து நின்ற அவரது அன்பு மனைவி காலரா நோயினால் மரித்துப் போனார். அதோடு இல்லாமல் கர்த்தர் கொடுத்த நான்கு பிள்ளைகளும் இறந்தனர். "தொடர்ச்சியான இழப்புகளினால் இதயங்கள் வெடித்துச் சிதறினாலும் இயேசுவோ எல்லாவற்றிலும் உயர்ந்து நின்றார்! 'நான் தனித்து விடப்பட்டவன் அல்லளூ முன்பைக்காட்டிலும் கர்த்தரோடு அதிக நெருக்கமாக உள்ளேன்' என்று இந்தச் சூழ்நிலையின் மத்தியிலும் அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? 

மேலும் வியாதி ஒரு பக்கம், தேவை மறுபக்கம்! இதன் நடுவிலும் யாரிடமோ காணிக்கைத் தாருங்கள் என்று கேட்கத் தேவையில்லாதபடிக்கு, சீன உள்நாட்டு மிஷனை தேவன் அருமையாக நடத்திவந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை சொன்ன போதும் பணத்தைப் பற்றி அவர் பேசவே இல்லை.

முதுகெலும்பில் வியாதிப்பட்டு பல நாட்கள் படுக்கையில் இருந்த போது ஆண்டவர் அவருக்கு வரும் நாட்களைப் பற்றிய அருமையான  தரிசனங்களைத் தந்தார். 

இறுதியில், இதுவரை சென்றிராத சீனாவின் கடைசி மாநிலத்தின் தலைநகரமான சாங்ஷாவிலிருந்து ஊழியம் செய்ய அவர் விரும்பினார். ஆயினும், 1905 ஆம் ஆண்டு அந்த இடத்திற்குச் சென்று ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே தன் வெற்றிகரமான ஓட்டத்தை முடித்து பரலோகம் சென்றுவிட்டார். சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தில் அப்போது 850 மிஷனரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 205 பணித்தளங்கள் மற்றும்  ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன கிறிஸ்தவர்களும் காணப்பட்டனர். சீன நாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது.

இது நடக்கவே நடக்காது ஒருவரும் செய்யமுடியாது என்று மனுஷன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் சிரிக்கும். கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவராமல் கீழ்ப்படிந்து, தேவனின் சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்.' என்று ஹட்சன் டெய்லர் எப்போதும் சொல்வார். சீன இன்லன்ட் மிஷன் மற்ற மிஷனரி சங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது. ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் இயேசு கிறிஸ்துவின் சீடரைப் போன்றே ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சீனாவின் முன்னோடி மிஷனரியாகவும் அப்போஸ்தலராகவும் அழைக்கப்பட்ட இவர், 'சீனாவின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டார். நற்செய்தி பணியில் ஒரு தந்தையாக நாம் அவரை பார்க்க முடியும்.

நாம் பரலோகத்திற்கு போகும்போது ஒரு பெரும் கூட்டம் சீன மக்கள் ஹட்சன் டெய்லரைப் பார்த்து, உற்சாகமாய் அவரை வரவேற்று "நீர் பாக்கியவான்" என்று சொல்வார்கள் அல்லவா..? 

ஆமா! குட்டி குட்டிப் பிள்ளைகளே!! ஹட்சன் டெய்லரைப் போல உங்களையும் நம் அன்பு ஆண்டவர் அழைத்தால் என்ன சொல்லப் போகிறீர்கள்...?


August 2025

     

  


   

    இங்கிலாந்து தேசத்தில், கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து,  வேத அறிவையும் கூடவே பெற்றிருந்த ஹட்சன் டெய்லர், 'நான் பெரியவனாகிப் படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்" என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டதையும், 'சீன தேசத்திற்கு நீ செல்லவேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்று தேவன் அவரோடு இடைபட்டதையும், அப்பணிக்காக மருத்துவம் பயின்று, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைக் கற்று அவர் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததையும் மற்றும் ஆறு மாதங்கள் தொடர் கடல்பிரயாணம் செய்து, சீன மண்ணில் கால் பதித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினதையும் கடந்த இதழ்களில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சீனாவில் தொடர்ந்து அவர் செய்த ஊழியங்களைக் குறித்து காண்போமா? 

ஹட்சன் டெய்லர் சீனாவில் தொடர்ந்து ஊழியம் செய்துவந்த நாட்களில், தனது நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணை மணந்துகொண்டு  ஊழியத்தில் முன்னேறிச் சென்றார். ஒருமுறை, சீனாவில், நிங்போ மொழியில் ஓர் புதிய ஏற்பாடு ஹட்சன் டெய்லரின் கைகளில் கிடைத்தபோது, அவர் அதை வாசித்து, சில திருத்தங்களையும் அதில் செய்துகொடுத்தார்.  

தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் இடைவிடாத ஊழியங்களைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் கழித்து தன் சொந்த நாடு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு இருந்த நாட்களில், அங்குள்ளவர்களிடம் சீன தேசத்தின் தேவையைப் பற்றியும் மற்றும் அங்குள்ள எண்ணற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மிஷனரி கூட இல்லை என்பதையும் கைப்பிரதிகள் (Phயஅடநவள) மூலமாகத் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். தேவனுடைய தீர்மானத்தின்படியே பத்து பவுண்டு என்ற ஒரு சிறு தொகையைக் கொண்டு "சீன உள்நாட்டு மிஷன்" ஸ்தாபிக்கப்பட்டது. 16 புதிய மிஷனரிகள் சீன நாட்டை நோக்கி பயணமாயினர். கப்பல் பிரயாணத்தில் கப்பல் ஊழியர்களையும் கிறிஸ்துவுக்கு என்று ஆதாயப்படுத்த தேவ கிருபை கிடைத்தது. "தன் வீட்டிலும், சொந்த நாட்டிலும் பயன்படாத ஒருவர், அயல் நாட்டிலும் கிறிஸ்துவின் பணியில் பயன்பட முடியாது. ஒரு மிஷனரி கடல் கடந்து செல்வதால் மட்டும் உருவாகிவிட முடியாது." என்று ஹட்சன் சொல்வார். 

சீன உள்நாட்டு மிஷன் 20 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வளர்ந்து, விரிந்து பெருகியது. இந்நிலையில், 12 ஆண்டுகள் அவரோடு இணைந்து நின்ற அவரது அன்பு மனைவி காலரா நோயினால் மரித்துப் போனார். அதோடு இல்லாமல் கர்த்தர் கொடுத்த நான்கு பிள்ளைகளும் இறந்தனர். "தொடர்ச்சியான இழப்புகளினால் இதயங்கள் வெடித்துச் சிதறினாலும் இயேசுவோ எல்லாவற்றிலும் உயர்ந்து நின்றார்! 'நான் தனித்து விடப்பட்டவன் அல்ல முன்னைக்காட்டிலும் கர்த்தரோடு அதிக நெருக்கமாக உள்ளேன்' என்று இந்தச் சூழ்நிலையின் மத்தியிலும் அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? 

மேலும் வியாதி ஒரு பக்கம், தேவை மறுபக்கம்! இதன் நடுவிலும் யாரிடமோ காணிக்கைத் தாருங்கள் என்று கேட்கத் தேவையில்லாதபடிக்கு, சீன உள்நாட்டு மிஷனை தேவன் அருமையாக நடத்திவந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை சொன்ன போதும் பணத்தைப் பற்றி அவர் பேசவே இல்லை.

முதுகெலும்பில் வியாதிப்பட்டு பல நாட்கள் படுக்கையில் இருந்த போது ஆண்டவர் அவருக்கு வரும் நாட்களைப் பற்றிய அருமையான  தரிசனங்களைத் தந்தார். 

இறுதியில், இதுவரை சென்றிராத சீனாவின் கடைசி மாநிலத்தின் தலைநகரமான சாங்ஷாவிலிருந்து ஊழியம் செய்ய அவர் விரும்பினார். ஆயினும், 1905 ஆம் ஆண்டு அந்த இடத்திற்குச் சென்று ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே தன் வெற்றிகரமான ஓட்டத்தை முடித்து பரலோகம் சென்றுவிட்டார். சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தில் அப்போது 850 மிஷனரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 205 பணித்தளங்கள் மற்றும்  ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன கிறிஸ்தவர்களும் காணப்பட்டனர். சீன நாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது.

இது நடக்கவே நடக்காது ஒருவரும் செய்யமுடியாது என்று மனுஷன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் சிரிக்கும். கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவராமல் கீழ்ப்படிந்து, தேவனின் சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்.' என்று ஹட்சன் டெய்லர் எப்போதும் சொல்வார். சீன இன்லன்ட் மிஷன் மற்ற மிஷனரி சங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது. ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் இயேசு கிறிஸ்துவின் சீடரைப் போன்றே ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சீனாவின் முன்னோடி மிஷனரியாகவும் அப்போஸ்தலராகவும் அழைக்கப்பட்ட இவர், 'சீனாவின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டார். நற்செய்தி பணியில் ஒரு தந்தையாக நாம் அவரை பார்க்க முடியும்.

நாம் பரலோகத்திற்கு போகும்போது ஒரு பெரும் கூட்டம் சீன மக்கள் ஹட்சன் டெய்லரைப் பார்த்து, உற்சாகமாய் அவரை வரவேற்று "நீர் பாக்கியவான்" என்று சொல்வார்கள் அல்லவா..? 

ஆமா! குட்டி குட்டிப் பிள்ளைகளே!! ஹட்சன் டெய்லரைப் போல உங்களையும் நம் அன்பு ஆண்டவர் அழைத்தால் என்ன சொல்லப் போகிறீர்கள்...?


July 2025



 கிறிஸ்துவுக்குள் அன்பான தம்பி தங்கையரே! சென்ற இதழில், இங்கிலாந்து தேசத்தில் பிறந்து, சீன தேசத்திற்கு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்ட ஹட்சன் டெய்லர், அதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததை வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோமா! 

ஒருமுறை ஹட்சன் டெய்லரின் கையில் இருந்ததோ ஒற்றைக் காசுதான். அந்நேரத்தில், சுகவீனமான ஒரு தாயாருக்காக ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தார் ஹட்சன் டெய்லர். ஜெபிக்கும்படி அந்தத் தாயாரின் வீட்டிற்கு அவர் சென்றபோது, அங்கே அந்தத் தாயாரின் பிள்ளைகளோ பசியினால் வாடிக்கொண்டிருந்தனர். தாயாருக்காக அவர் ஜெபிக்க ஆரம்பித்தபோது, அவரது வாயில் வார்த்தைகள் வெளிவரவில்லை. தொண்டை அடைத்தது. கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பசியைப் போக்காமல், மாய்மாலக்காரனாக ஜெபிக்கிறாயா? என்று அவர் மனசாட்சியில் சுடப்பட்டார். தொடர்ந்து, அவர்களைப் பசியாற்றிய பின் ஜெபித்து அங்கிருந்து திருப்தியோடு சென்றார். அதன் பலன் அவருக்கு பல மடங்காகத் திரும்பக் கிடைத்தது. இப்படித்தான் அவர் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டு, தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தில் வளர்ந்தார்.

கடினமாக உழைத்து, உடற்பயிற்சி செய்து மருத்துவம் பயின்றதோடு, இறையியலையும் அத்துடன் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 

    உலகின் பல பாகங்களில் சென்று ஊழியம் செய்து கொண்டிருந்த மிஷனரி ஸ்தாபனங்களின் தகவல்களையும் விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டார். எளிமையாக மற்றும் தன்னலமற்ற வாழ்க்கை வாழ்ந்து, தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஊழியத்திற்கு என்று கொடுத்து, கிறிஸ்துவோடு கூட மிகவும் நெருங்கி வாழும் வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டார். 

ஒருமுறை, விஷக் காய்ச்சலினால் மரித்துப்போன ஒருவருடைய உடலைப் பரிசோதிக்கும்போது, இவரும் அந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். சீனாவிற்கு 

மிஷனரியாகச் சென்று அங்கேயே மரிக்கவேண்டும் என்று இருந்த கனவெல்லாம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் எதுவும் இல்லாமல், விசுவாசத்தில் உறுதியாக இருந்து பூரண சுகம் பெற்றார். இவ்விதமாக, பல்வேறு அனுபவங்களின் மூலமாகப் பெலப்படுத்தப்பட்டவராய், 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹட்சன் டெய்லர் சீனாவிற்கு கப்பலேறி, ஒருசில நண்பர்கள் அவரை வழியனுப்ப தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார். 

நெடுந்தூரம், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடற்பிரயாணம் செய்து சீன நாட்டில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து அவர் கரை இறங்கியபோது, வரவேற்பதற்கு என்று யாரும் இல்லை; நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ ஒருவரும் இல்லை. இருப்பினும், சீன மண்ணில் கால் வைத்தபோது அவரது உள்ளமெல்லாம் குளிர்ந்தது. கனவெல்லாம், தரிசனம் எல்லாம் நிறைவேறும் காலமல்லவோ அது! அந்த சீன நாட்டின் உள்ளே மூலை முடுக்கெல்லாம் புகுந்து மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும் தாண்டி நதியாகப் பாய்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப் போகிறவர் அல்லவா அவர்!! 

இளம் வாலிப மிஷனரியை நோக்கி பல சவால்கள் தேடி வந்தன! விலைவாசி உயர்வினால் உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலைமை மற்றும் உள்நாட்டு மக்களின் புரட்சி அவருடைய உற்சாகத்திற்கு முட்டுக்கட்டை கொடுக்க, அவரோ மிகக் குறைந்த மொழி அறிவோடு இருந்தாலும், சீன மக்களைச் சந்திப்பதிலும், நற்செய்தி நூல்கள் மற்றும் கைப்பிரதிகளைக் கொடுப்பதிலும், சீனர்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவதிலும் மிகவும் துடிப்பாக இறங்கினார். 

இவ்வாறாக, கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியத்தைச் செய்துகொண்டிருந்த வேளையில், உயரமான குடிகார பலசாலி மனிதன் கையில் ஒரு முறை இவர் மாட்டிக்கொண்டார். தலை முடியை பிடித்து இவரை அந்த மனிதன் உதைத்த நிலையில், மயங்கி விழுந்தபோதிலும், மீண்டும் எழுந்து எல்லோருக்கும் நற்செய்தி நூல்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தார்; காரணம் இனி ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்குமா என்ற ஏக்கம் தான். ஒருபுறம் எதிரிகள் இருக்கத்தான் செய்தார்கள்; ஆனால், மறு பக்கமோ அவருக்கு வரவேற்பும் இருந்தது. ஒரு அரசாங்க அதிகாரி அவரைப் பார்த்து, அவருடன் மிகவும் மரியாதையாக மற்றும் ஆறுதலாகப் பேசி ஒரு புதிய ஏற்பாட்டையும் பெற்றுக்கொண்டார்.  சீனர்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால் சீன மக்களைப் போன்றே ஆக வேண்டும் என்று அறிந்திருந்த அவர், சீன மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். சீன உடைகளை வாங்கி அணிய ஆரம்பித்தார். இது ஐரோப்பிய மிஷனரிகளுக்குப் பிடிக்கவில்லைதான், 'எப்படியாயினும் சிலரையாவது இரட்சிக்கும்படிக்கு நான் யூதருக்கு யூதனாகவும், கிரேக்கருக்கு கிரேக்கனாகவும், எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன்" என்று பவுல் அடியார் சொன்னது போல, அவர்  வாழ ஆரம்பித்தார். இதனால் சீக்கிரத்திலே அவருக்கு முதற்கனியாக பலன் கிடைத்தது. பின்னால் இருந்து அவருடைய கரங்களைத் தாங்கி பிடித்து உதவியோ மற்றும் ஒத்தாசையோ செய்வார் யாருமே இல்லை. ஆண்டவருடைய வழி நடத்துதலும் அவருக்கு ஓர் அடி மாத்திரமே கிடைத்தது. என்றபோதிலும், அவருக்கு தொலைநோக்குத் தரிசனம் இருந்ததால், அவர் பாதத்தில் அதிகமாகக் காத்திருந்தார். உள்நாட்டில் ஆங்காங்கே எதிர்பாராத புரட்சிகள் வெடித்த நிலையில், பிரிட்டிஷ் அதிகாரிகளால் உள்நாட்டிற்குள் செல்ல மறுக்கப்பட்டார். ஆனால், அவரோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதை பார்க்கிலும், சீன மக்களுக்கு இயேசுவை இரட்சகராக அறிவித்து, அவர்களைப் பாதுகாப்பதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருந்தார். 


ட்ச்சுங் என்ற நகரில் ஓர் மருத்துவமனையை நிறுவி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்தார். ஒருமுறை, ஒரு மருத்துவமனையோ அல்லது மருத்துவரோ இல்லாத வேறொரு இடமான நிங்போ என்ற நகருக்குச் செல்வதற்காக வேலைக்காரனோடு தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றபோது, வேலைக்காரனோ அவருடைய பொருட்களை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். இந்நிலையில், சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், களைத்துப் போய் மயங்கிய நிலையில், தன் பொருள்கள் பறிபோனதைப் பற்றி கொஞ்சமும் அவர் கவலைப்படவில்லை, அவரது கவலை எல்லாம் சீனர்களைப் பற்றியே இருந்தது. - தொடரும்


June 2025



 

ஒல்லியான உருவம்! ஒதுங்கி வாழும் சுபாவம்!! கொண்ட இவர் லண்டன் மாநகரின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  மிஷனரியாகப் போக அவருக்கு ஆசை; ஆனால், இவரை பார்ப்பவர்கள் இவர் அதற்கு தகுதியானவரா? என்றுதான் சந்தேகப்படுவர். இவர் உலக ஐசுவரியம் இல்லாதவர், வறுமையில் வாழ்ந்தவர், வாழ்க்கை வசதிகளை உதறித் தள்ளியவர். அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினவர். ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் விசுவாசித்து அவரின் வார்த்தையை உறுதியாய் பற்றிப்பிடித்து, அவரையே நம்பிச் சார்ந்ததே இவரது வாழ்க்கையின் ரகசியம். வேதத்தில் சொல்லப்பட்ட 'என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு" என்று பவுல் சொன்னது போல, இவரைப் போன்ற மிகப் பெலவீனமான மனிதர்களையே தம்முடைய மகிமைக்காக, தம்முடைய சித்தத்தின்படி தேவன் பயன்படுத்தி வருகிறார். லண்டனில் மருத்துவம் பயின்று வந்த நாட்களில், ஒரே ஒரு ரொட்டியை காலையும் மதியமும் சாப்பிட்டுக் கொண்டு, வீட்டிற்கும் மருத்துவக் கல்லூரிக்கும் இடையே உள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்று வந்து கொண்டிருந்தார். யார் இவர்....?

    அன்று உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்ததும், இன்று பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் இரண்டாவது பெரிய நாடானதுமான சீன நாட்டிற்கு முன்னோடி மிஷனரியாகச் சென்று பெரிய "சீன உள்நாட்டு மிஷன்"- ஐ ஸ்தாபித்தவர், இவர் தான் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்.

1832 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார் ஹட்சன் டெய்லர். நல்ல கிறிஸ்தவ பெற்றோர், அவருடைய இளமையிலேயே அவருக்கு வேதத்தைப் போதித்ததோடு, எபிரேய மொழியையும் கற்றுக் கொடுத்தனர். அவருடைய தகப்பனார் தன் செல்ல மகனின் அருகில் உட்கார்ந்துகொண்டு பல புதிய மற்றும் அரிய காரியங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்களில், ஒரு நாள் அவர்களின் பேச்சு பெரிய சீன நாட்டைப் பற்றியதாக இருந்தது. ஐரோப்பிய நாட்டில் இருந்த திருச்சபைகள் சீன நாட்டிற்கு மிஷனரிகளாக யாரையும் அனுப்புவதோ அல்லது எதையாவது செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமோ அவர்களுக்கு இல்லை என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த குட்டித் தம்பியான ஹட்சன், 'நான் பெரியவனாகி படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்' என்று உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு ஐந்து வயது தான். 

ஆவிக்குரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் 14 ஆம் வயதில் ஒரு கைப்பிரதியில், "எல்லாம் முடிந்தது" என்ற தலைப்பில், நம் அன்பு தெய்வம் இயேசு சிலுவை மரத்திலே சொன்னதாக எழுதப்பட்ட வார்த்தைகளைப் படித்த போது தான் பாவ உணர்வு அடைந்து இரட்சிப்புக்கு நேராக தன் இருதயத்தை அவர் திருப்பினார். என்ன நடந்தது தெரியுமா குட்டீஸ் உங்களுக்கு...? அதே நாளில் அவருடைய தாயார் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தில் இருந்து கொண்டு தன் அன்பு மகனுக்காக அதிக பாரத்தோடு அவன் எப்படியாவது இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதம்! அதுதான் "இரட்சிப்பு". குட்டித் தம்பித், தங்கையே, உனக்கு இந்த அனுபவம் உண்டா? அதைப் பெற்றுக் கொண்ட புதிய அனுபவத்தினால் ஹட்சன் மிகவும் சந்தோஷமடைந்தார். தனது தாயார் வீட்டிற்கு வந்தபோது அதை பகிர்ந்து கொண்டு இருவருமாக சேர்ந்து ஆண்டவரைத் துதித்தனர்.

அது ஒரு மதிய வேளை முழங்காலில் தன் திறந்த வேதாகமத்தோடு நின்று கொண்டு, ஆண்டவரிடம், "இயேசுவே நான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கற்றுத் தாரும். நீர் சொல்லும் வரை இந்த அறையில் இருந்து நான் வெளியே செல்லப் போவதில்லை என்று ஜெபித்தார் ஹட்சன். "சீன தேசத்திற்கு நீ செல்ல வேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்ற தெளிவான சத்தம் அவருக்கு கேட்டது. மீட்பின் அனுபவம் பெற்ற சில மாதங்களிலேயே அழைப்பின் குரல் அவரைத் தேடி வந்தது.

இனி சும்மா இருக்க முடியுமா என்ன...?  சீன தேசத்தின் தகவல்களைத் தேடிச் சேகரித்தார். அதற்கென்று எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்து கொள்ளவும், மொழியை கற்றுக் கொள்ளவும் முனைந்து நின்றார். சுயமாகவே சீன மொழியைக் கற்றுக்கொண்டு லூக்கா சுவிசேஷத்தை சீன மொழியில் படித்து முடித்தார். 

சீன மக்களின் இதயங்களை வெல்ல சுவிசேஷத்தை பிரசங்கிப்பதோடு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்த அவர், மருத்துவம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்டார். ஹல்லில் மருத்துவராக இருந்த தனது மாமாவிடம் சென்று சில அடிப்படை திறன்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்நாட்களில், ஹட்சன் முதன் முதலில் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நம்பிக்கைக்கடுத்த பாடங்களையும் கற்றுக் கொண்டார்.                            
                                                                                                                                    - தொடரும்






April 2025

 



Hi குட்டிப் பிள்ளைகளே! இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாக, கடவுள் இல்லை என்று நாஸ்திகனாக வாழ்ந்த அதோனிராம் ஜட்சனின் வாலிப நாட்களைக் குறித்தும், வியாதிப்படுக்கையில் கிடந்த தனது நண்பனின் மரணத்தைத் தொடர்ந்து, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, 'ஆண்டவரை மாத்திரமே தன் வாழ்நாள் முழுவதும் பிரியப்படுத்தவேண்டும்' என்ற எண்ணத்தோடு மிஷனரியாக தன்னை அர்ப்பணித்துப் புறப்பட்டுச் சென்ற அவரது வாழ்க்கையைக் குறித்தும், பர்மாவின் சக்கரவர்த்தியினால் சிறைச்சாலையில் வைக்கப்பட்டதைக் குறித்தும் மற்றும் விடுதலை செய்யப்பட்டதைக் குறித்தும் சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சிறையிலிருந்து அவர் விடுதலையானதைத் தொடர்ந்து அவர் செய்த ஊழியத்தின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளலாமா!

சிறையிலிருந்து அதோனிராம் ஜட்சன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் ஒரு அறையில், ஆன் அம்மையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவராகப் படுத்திருந்தார். ஆன் அம்மையார் சற்று குணமடைந்த பின்னர் அங்கிருந்து குடும்பமாக வேறு இடத்திற்கு மாறிச் சென்று, அங்கே அவரை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் கமிஷனருக்கு உதவி செய்வதற்காக ஆவா பட்டணத்திற்குச் சென்றார் ஜட்சன். ஜட்சன் அங்கு இருக்கும்போது, அந்தோ பரிதாபம்! டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆன் அம்மையார் இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. மனைவியின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியாத நிலையினை எண்ணி ஜட்சன் துக்கப்பட்டார்.

துக்க பாரத்தினால் தொய்ந்துபோன அவர், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த காட்டில் ஒரு சிறிய குடிசை அமைத்து ,அதில் சில காலம் தங்கி இருந்தார். பிற மிஷனரி நண்பர்கள் மூலமாக அவரை ஆறுதல்படுத்தித் தேற்றினார் தேவன். இச்சூழ்நிலையிலும், நடந்த எல்லா காரியங்கள் மூலமாக தன்னை ஆண்டவர் தமது அருகில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஜட்சன் உணர்ந்தபடியால், அவர் ஆண்டவரின் அழைப்பையோ, நடந்த காரியங்களைப் பற்றியோ கேள்விகள் கேட்கவில்லை. அதன் பிறகு அவர் 'மௌல்மீன்' என்ற ஊரில் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் தொடர்ந்து அவருடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். பின்பு சபையும் அங்கே உண்டானது. 1834 ஆம் ஆண்டு முழு வேதாகமும் பர்மிய மொழியில் வெளிவந்தது. 1840 ஆம்  ஆண்டு அது முழுவதுமாக திருத்தி அமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நூற்றுக்கும் அதிகமான மக்கள் சபையில் சேர்க்கப்பட்டனர். அந்நாட்களில், கடுமையான உழைப்பினால் பலன் குன்றி காச நோயினால் பாதிக்கப்பட்டார் ஜட்சன். 

33 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே ஜட்சன் தனது தாய் நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். என்றாலும் அவர் அங்கே அதிக நாள் தங்கி இருக்க விரும்பவில்லை. மீண்டும் அவர் பர்மாவுக்குத் திரும்பினார். திரும்பியவர் திரும்பவும் தன் தாய் நாட்டைக் காணவே இல்லை. மனைவியின் மறைவுக்குப் பின் தனியாக 24 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார். அவர் பர்மிய மொழியில் ஒரு சொல் அகராதியை அமைத்து முடித்தார். தனக்கு சுகம் கிடைப்பதற்காக அவ்வப்போது கடல் யாத்திரை செய்தார். அவ்விதமாக ஒரு முறை கடல் யாத்திரை சென்றபோது 1850 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ம் நாள் தன்னுடைய 62 ஆம் வயதில் அவர் நடுக்கடலில் கப்பலிலே மரித்தார். மூன்று பிள்ளைகளையும் நற்கனிகளைத் தரும் விதைகளாக மியான்மரின் மண்ணிலே அடக்கம் செய்தார். மனைவியையும் அப்படியே பர்மாவிலே விதைத்தார். ஆனால், அவர் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை பூமி எது தெரியுமா? எந்த தேசத்தை தன் இருதயத்தில் ஏந்தி மிஷனரியாக கடந்து வந்தாரோ அந்த தேசத்தின் பெயர் உள்ள பரந்து விரிந்த இந்து மகா சமுத்திரத்தில் தான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

"இந்த பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டுச் செல்வது இல்லை." என்று இளைஞனாக இருக்கும்போதே வைராக்கியமாக தீர்மானித்து இருந்தார். அதன் பயனாக 30 ஆண்டுகள் கழிந்த பிறகு 1850 இல் பர்மாவில் 63 ஆலயங்களும், 123 அருட்பணியாளர்களும், ஊழியர்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட 7000-க்கும் மேலானவர்களும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் ஏற்றி வைத்த தீபம் இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது