Feb 2026

 



ஹலோ கிட்ஸ்! உங்க பெற்றோர் மூலமாக நீங்க நிறைய நன்மைகளைப் பெற்றவங்க அப்படித்தானே...! ஏனென்றால், உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் அனாதைகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது அனாதை இல்லங்களிலும் விடுதிகளிலும் இருக்கிறார்கள். நீங்க கூட பண்டிகை நாட்களில் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும்போது இந்த ஹோம்களுக்குச் சென்று அவர்களோடு உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். இந்த இதழில், விசுவாசத்தினால் அநேக அனாதை விடுதிகளை நிறுவி, எண்ணற்ற சிறுவர் சிறுமியருக்குத் தந்தையாக இருந்து ஆதரவளித்து, அவர்களுக்கு வேதத்தைப் போதித்து, கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய ஒரு அங்கிளைப் பற்றி பார்ப்போமா...?

    பாடல் வேளை முடிந்து எல்லாரும் முழங்கால்படியிட்டு ஜெபிக்கின்றனர்ஆனால், வேதாகமக் கல்லூரியில் படிக்கும் ஜார்ஜ் முல்லருக்கு அது முடியவில்லை; அவர் ஆச்சரியப்படுகிறார். அந்த வல்லமையான ஜெபம் அவரை அசைத்ததோடு, தேவனோடு தன்னால் சரியாக ஐக்கியம் கொள்ளமுடியாததற்கு தன்னுடைய பாவங்களே காரணம் என்றும் உணரவைத்தது. அதுவரை வாழ்ந்து வந்த மோசமான வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்தினார். அவரின் நெடுநாள் மனப்போராட்டத்திற்கு அங்கே விடுதலை கிடைத்தது.

                ஐரோப்பாவில் பிரஷியா என்ற நாட்டில் 1805 செப்டம்பர் 27- ல் ஜார்ஜ் முல்லர் பிறந்தார். ஜெர்மானியரான அவரது தகப்பனார் வரி வசூலிக்கும் ஓர் அரசு அதிகாரி. முல்லரின் தந்தை தேவைக்கு அதிகமான பணத்தை பிள்ளைகள் கையில் தந்ததால், அதை இஷ்டப்படி செலவு செய்து உல்லாசமாய் வாழ்ந்தார் முல்லர். இளம் பிராயத்திலேயே சீட்டு விளையாடுவது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டு பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்து தன் தந்தையின் பாக்கெட்டிலும் கைவைத்ததோடு, அவர் சேர்த்து வைத்திருந்த அரசாங்கப் பணத்தையும் திருடி விளையாடினார். ஆலய ஆராதனையில் காணிக்கை போடுவதற்கு கொடுக்கப்படும் பணத்தையும் காணிக்கைப் பையில் போடாமல் அதையும் சூதாட்டத்தில்தான் செலவளிப்பார் என்றால் எப்படி என்று பாருங்களேன்..? ஒருநாள் மேஜையில் இருந்த சில கரன்சி நோட்டுக்களைத் திருடி அதைத் தன் ஷ_க்குள் வைத்துக் கொண்டு, தந்தை அங்கே வந்தபோது நல்லபிள்ளை போல் நடித்தார். அடிக்கடி பணம் திருடு போவதால் தன் மகனை சோதிக்கவே அவர் பணத்தை மேஜையில் வைத்திருந்தார். வசமாக மாட்டிக்கொண்ட முல்லருக்கு ~செம| அடிக்கிடைத்தும் மனம் மாறவில்லை.

        தன் மகன், பள்ளிப் படிப்பை முடித்து, வேதாகமக் கல்லூரியில் படித்து, பின் ஒரு அரசாங்க ஆதரவு பெற்ற லுத்தரன் சபை குருவானவராக ஆகிவிட்டால் வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழலாம் என்பதே தந்தையின் விருப்பமாக இருந்தது. குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்த முல்லரோ, 14 வயதில் அதிகாலை 2 மணி வரை கேளிக்கை விடுதியில் சீட்டாடி வெறித்து ஹாஸ்டலுக்கு வந்து படுத்தார். காலையிலே சற்றும் எதிர்பாராத செய்தியுடன் அவர் தந்தை அங்கே வந்து சேர்ந்தார். என்ன ஆயிற்று...? அன்பான தாயார் மரித்துவிட்டார்...! ஆம். தான் குடிபோதையில் சீட்டாடிக்கொண்டிருந்த அதேநேரத்தில்தான் தாயார் வேதனையில் துடிதுடித்து மரித்தார் என்பதைக் கேட்டு திடுக்கிட்டார். துக்கம் தொண்டையை அடைத்தது உண்மைதான்; என்றாலும், அது மனம்திரும்புதலுக்கு ஏற்ற துக்கமாக அமையவில்லை. மீண்டும் அதே பழைய மோசமான வாழ்க்கையே... தொடர்ந்தது.

     16 வயதில் ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றிப்பார்க்கும் ஆசை தொற்றிப் பிடித்தது; ஆனால், கையிலோ பணமில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்த அவர், தகப்பனார் வசூலித்து வரச்சொன்ன வாடகைப் பணத்திலும் கை வைத்துவிட்டார். 1821 - ல் முல்லரின் சுற்றுப்பயணம் துவங்கியது. மேக்டிபர்க், பிரான்ஸ்விக் போன்ற பட்டணங்களில் சுற்றித் திரிந்து, ஆடம்பரமாகச் செலவு செய்து, அதிக பணம் கொடுத்து பெரிய ஹோட்டல்களில் தங்கி, கெட்டக்குமாரன் போல கையிலிருந்த பணமெல்லாம் காலியானது. விடுதிக்குக் கொடுக்க பணம் இல்லாதபோது, அவரது விலையுயர்ந்த ஆடைகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்! இருப்பினும், அவருக்கு வீடு திரும்ப ஆசையின்றி சில இடங்களில் ஏமாற்றித் தப்ப முயன்றபோது, பிடிக்கப்பட்டு நன்றாக அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வார காலம் முடியும்போது, இதையறிந்த தந்தை ஓடோடி வந்து கட்டவேண்டிய பணத்தைக் கட்டி மகனை மீட்டார். பாருங்க குட்டீஸ்! எப்படிப்பட்ட முல்லரை இயேசப்பா தெரிந்து கொண்டாங்க பார்த்தீங்களா...?

   இப்போது படிப்பில் கொஞ்சம் ஆர்வம் வந்தாலும் கூட, கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டபாடில்லை! வெளியே தெரியும்படியாகச் செய்யாவிட்டாலும், மறைவாகத் தொடர்ந்தார். தாய் மொழியாம் ஜெர்மன் மற்றும் இலத்தின், பிரெஞ்ச் மொழிகளிலும் வரலாற்றிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றார். எல்லாரிடமும் நல்லவராக நடித்தார். தந்தையின் விருப்பம் நிறைவேற குரு பட்டம் பெற ஹாலே யுனிவர்சிட்டியில் சேர்ந்தார். மற்றவர்களுக்காக தன்னை தேவனுக்கு முன்பாக ஆயத்தப்படுத்தவேண்டுமே என்றில்லாமல், ~நல்லவன்| என்று பெயர் வாங்கவேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோள் மாத்திரமே அவருக்கு இருந்தது. பள்ளிப் பருவ நண்பர் பேட்டாவோடு சேர்ந்து ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலி நாட்டைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் துடித்தார். ஆனால், பாஸ்போர்ட் வேண்டுமே... தந்தையின் கையெழுத்து வேண்டுமே... அந்தோ! கள்ளக் கையெழுத்து போட்டு பாஸ்போர்ட்டும் வாங்கிவிட்டார். பணத்திற்கு எங்கே போவது..? முல்லர் தனது பாடநூல்களை அடகுவைத்து தேவையான பணத்தையும் திரட்டிவிட்டார்; பயணமும் புறப்பட்டார் நால்வரோடு... அவர்களின் பணத்தையும் தானே நிர்வாகம் செய்து, கள்ளக் கணக்கு எழுதி அவர்களையும் ஏய்த்துவிட்டார். இத்தனையாய் உலகத்தை அனுபவித்தும், கசப்பே மிஞ்சியது. அப்போதுதான் ஒரு வீட்டுக்கூட்டத்தில் முழங்காலில் அவர்கள் ஜெபித்த ஜெபம் முல்லரை அசைத்தது. இரவெல்லாம் தூக்கமின்றி மனப்போராட்டத்தில் அவர் புரண்டார். வாக்னர் என்ற சகோதரன் அவரை கிறிஸ்துவுக்குள் நடத்தியபோது, சுவிட்சர்லாந்தின் அழகான மலைகளில் சுற்றியபோது கிடைக்காத சந்தோஷமும் சமாதானமும் அவருக்குக் கிடைத்தது. இரட்சிப்பின் சந்தோஷம் கிடைக்கப்பெற்ற அன்றே ஊழிய அழைப்பினையும் பெற்றார்.

                புதிய துவக்கம், புதிய வாழ்க்கை... தனது நண்பர்களுடன் இரட்சிப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஆரம்பமானது. எந்த யூத கோத்திரத்திலிருந்து இயேசு வந்தாரோ, எந்த சொந்தங்களே அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ, அந்த யூதர்கள் நடுவில் போலந்து நாட்டில் ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்திருந்த ஹெர்மன் பால் என்ற புதிய நண்பர் மூலம், தானும் ஒரு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்தபோது, தன் தந்தையின் கோபத்திற்கு ஆளானார். ஓய்வு பெற்றபின் தானும் மகனோடு சேர்ந்து வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கனவுகண்ட தந்தைக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், வசதியான வாழ்க்கையல்ல, மெய்யான அர்ப்பணிப்புடன் தியாகமாகச் செய்யும் அருட்பணிதான் தன் அழைப்பு என்று கடினமான ஆனால் ஒரே தீர்மானமாக ஜெபித்து தன் தகப்பனாரின் கைகளில் பணஉதவியை எதிர்பாராமல் ஆண்டவரின் கைகளில் தன்னைத் தந்தார் முல்லர்.