March 2026

 















மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற விருப்பத்துடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ் முல்லரைக் குறித்து சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவரது விசுவாச வாழ்க்கையைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா?

யுனிவர்சிட்டியில் தான் பயின்றுகொண்டிருந்த நாட்களில், ஆரம்பமுதலே தனது தேவைகள் தேவனால் அற்புதமாகச் சந்திக்கப்படுவதை உணர்ந்த ஜார்ஜ் முல்லர், விசுவாசத்தில் ஒருநாளும் பின்வாங்கிப் போகவில்லை. கைப்பிரதிகள் மற்றும் நற்செய்தி நூல்கள் வாயிலாக இரட்சிப்பின் செய்தியைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்; அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயம் செய்தார். தேவனைத் துதிப்பதற்காகவும், வேதத்தைத் தியானிப்பதற்காகவும் மற்றும் ஜெபிப்பதற்காகவும் அநேகர் முல்லரைத் தேடிவந்தனர். முல்லர் யுனிவர்சிட்டியிலிருந்து வெளியேறும்போது, ஒரு சிறு ஊழியர் கூட்டத்தையே ஆயத்தப்படுத்திவிட்டுத்தான் சென்றார்.

1827-ல் ருமேனியா நாட்டில் ஜெர்மானியர்களுக்கு ஊழியம் செய்யும்படி அவர் ஆயத்தப்பட்டபோது, திடீரென்று ஏற்பட்ட போரின் காரணமாக அது கைகூடவில்லை. எனவே, யூதர்கள் மத்தியில் மிஷனரியாகச் செல்ல தீர்மானித்தார். லண்டன் மாநகர் சென்று பயிற்சியும் பெற்றார். 1829-ல், தனது 24 ஆம் வயதில், லண்டனில் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் கடுமையாக உழைத்து எபிரேய மற்றும் ஆங்கில மொழிகளை அவர் கற்கவேண்டியிருந்தது. பயிற்சி முடியும்வரை காத்திராமல், லண்டனின் யூதக் குடியிருப்புகளுக்குச் சென்று தெருப்பிரசங்கம் செய்து, 50 சிறுவர்களைக் கூட்டி வேதபாடவகுப்புகள் நடத்திவந்தார். 

எக்ஸெடர் என்ற இடத்தில் இவர் ஊழியம் செய்தபோது, இவரது விசுவாச வாழ்க்கையினால் தொடப்பட்ட மேரி குரோவ்ஸ் என்பவருடன், 1830 அக்டோபர் 7 ஆம் தேதி தனது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். முல்லரின் வைராக்கியமான ஊழியத்திற்கும் மற்றும் விசுவாச ஊழியத்திற்கும் உறுதுணையாயிருக்க தன்னை ஒப்புக்கொடுத்தவர் மேரி. முல்லர் தம்பதியர் தங்கள் தேவைகளுக்காக கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். சிலவேளைகளில் உணவு இல்லாமல்; அவர்கள் விசுவாசம் வெகுவாகச் சோதிக்கப்பட்டாலும், அவர்கள் மனம் தளர்ந்துபோய்விடவில்லை. அதே வேளை, தேவைக்கு அதிகமாக கிடைத்துவிட்டால், மேரி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்தளித்துவிடுவார். அன்றன்று தேவையான அப்பமே போதும் என்ற விசுவாச வாழ்க்கையே வாழ்ந்தார்கள் முல்லர் தம்பதியர். 1832-ல், முல்லரின் நெருங்கிய நண்பரான ஹென்றி கிரெய்க், முல்லரிடம் பிரிஸ்டல் நகரின் ஆவிக்குரிய நிலை குறித்தும் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் பகிர்ந்ததோடு, முல்லரும் தம்மோடு இணைந்து அங்கே ஊழியம் செய்தால் நலமாயிருக்கும் என்ற தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார். தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தாமதிக்காமல் பிரிஸ்டல் நகர் நோக்கி புறப்பட்ட அந்தப் பயணம், பிற்காலங்களில் பிரிஸ்டலை மையமாகக் கொண்டே அவர் ஊழியம் எழும்பப்போகிறது என்பதற்கு வழிகாட்டியது. 

அப்போது, பெரும் சோதனை அலைபோல் மோதியடித்தது. அந்நாட்களில் காலரா நோய் மிக வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளைகொண்டது, வெப்பம் மிகக் கடுமையானது, எண்ணற்ற மக்கள் மடிந்துகொண்டிருந்தனர். எனினும், தனது சுகத்தை துச்சமாகக் கருதி, மரித்துக்கொண்டிருந்த அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார் முல்லர். இச்சூழலில் முல்லர் தம்பதியருக்கு லிடியா என்ற அன்பு மகள் பிறந்தாள். 

'தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்" என்ற வசனத்தை வாசித்தபோது, இப்படிப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குக் கிடைத்தது. பிரிஸ்டலின் சேரிப்பகுதிகளில் எண்ணற்ற சிறுவர் சிறுமியர் படிப்பறிவில்லாமல் வாழ்க்கையை வீணாக்கியதோடு, உணவு பற்றாக்குறையோடும் காணப்பட்டதைக் கண்ட முல்லர், ஒரே ஒரு ஷில்லிங் மாத்திரமே கையில் இருந்தபோதிலும், விசுவாசத்தோடு இவ்ஊழியத்தைத் துவங்கினார். முல்லர் குடும்பத்தில் இரண்டாம் மகன் பிறந்தபோது, குடும்பத்தின் தேவைகளுக்குக்கூட பணம் இல்லைதான்; இருப்பினும், தன்னுடைய தேவைகளை தேவனின் கரங்களில் வைத்துவிட்டு, விசுவாசத்தோடு காத்திருந்தார். 20 பவுண்ட்கள் கிடைத்தால், இலவசமாக வேதாகமங்களை மக்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார்; அன்றே ஒரு பெண் முலம் அது கிடைத்தது. அற்புதமான துவக்கம், அத்தோடு ஊழியமும் படிப்படியாக உயர்ந்து ஏழை மாணவர்களுக்கான பகல் நேர கிறிஸ்தவப் பள்ளியும் தொடங்கப்பட்டது. 

அனாதை விடுதி என்பது இங்கிலாந்தில் அறியப்படாததாகவே இருந்த அந்நாட்களில், பகல் நேரப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் யாராவது அனாதைகளானால், காவலர்கள் அவர்களை பிச்சைக்கார விடுதிகளில் போட்டுவிடுவார்கள். எனவே, சிறு சிறு விடுதிகள் அமைத்து உணவு உடை கொடுக்கப்பட்டால் மாத்திரமே அவர்களைக் காப்பாற்றமுடியும் என்று முல்லர் யோசித்தபோது, உதவி செய்ய முன்வருவார் யாரும் இல்லை. என்றபோதிலும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ..? அப்போது ஏ. எச். பிராங்க் என்பவரின் வாழ்க்கை வரலாற்று நூல் முல்லரின் கையில் கிடைக்க, தேவன் அவரை எப்படியாய் ஏழைப் பிள்ளைகளைப் பராமரிக்கச் செய்தார் என்றும், முல்லர் அவரது ஹோமில் இரண்டுமாத காலம்  தங்கியிருந்ததையும் நினைவுகூர்ந்தார். வேதத்தை திறந்தார், 'வாயை விரிவாய்த் திற நான் அதை நிரப்புவேன்" என்ற வசனம் பளிச்சென்று அவரது கண்ணில் பட்டது; விசுவாசம் துளிர்த்து வளர்ந்தது. தேவனைத் துதித்தார் முல்லர். ஐந்தாம் நாள், 'தங்கள் வீட்டுச் சாமான்களை விடுதிக்காக கொடுப்பதோடு, தாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி விடுதியில் பணிசெய்ய விரும்புவதாக ஒரு விசுவாசத் தம்பதியர் கடிதம் எழுதியிருந்தனர். 30 ஏப்ரல் 1836-ல் 30 சிறுமிகளுடன் ஹோம் ஆரம்பமானது. அன்றாடத் தேவைகளை தேவன் அற்புதமாகப் பூர்த்தி செய்தார்; தனது தேவைகளை அவர் வெளியே யாரிடமும் கேடடதில்லை. விசுவாசத்தில் பின்வாங்கவில்லை! கடன்பட்டதில்லை! பிள்ளைகளுக்குத் தேவையான உணவுகளும் உடைகளும் கிடைக்காமல் இருந்ததும் இல்லை!! வற்றிப்போகாத விசுவாசத்தினால் அற்புதமாக விடுதிகள் பராமரிக்கப்பட்டன!!! பதிலளிக்கப்பட்ட ஜெபங்களே இவ்விடுதிகளின் வரலாறு. 

திடீரென்று முல்லருக்கு ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. 1842 பிப்ரவரி மாதம் அது, ஜெபித்துவிட்டு முல்லர் தூங்கிவிட்டார். ஆனால், உறங்காத தேவனோ பார்த்துக்கொண்டேயிருந்தார். காலை நேரம் அது, தொழிலதிபர் ஒருவர் தன் அலுவலகம் நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தார்; ஆனால், முல்லரின் விடுதியைத் தாண்டி அவரால் செல்லமுடியவில்லை. திரும்பி வரும்போது கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்று நினைத்தவராக மீண்டும் நடக்க ஆரம்பித்தார்; ஆனால் அவரது கால்கள் போகவில்லை. தேவன் அவரை நெருக்கி ஏவினதால், உடனே கீழ்ப்படிந்து கொடுத்த பின் தான் அவரால் அங்கிருந்து நகர முடிந்தது. 

ஒருநாள் காலை, உணவிற்காக மேஜையில் தட்டுகளும், கிண்ணங்களும், கரண்டிகளும் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் உணவு? பிள்ளைகள் உணவிற்காக ஜெபித்து முடித்து கண்களைத் திறந்தபோது, கதவு தட்டப்பட, அங்கே ரொட்டிக் கடைக்காரர் ரொட்டிகளுடன் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் கதவு தட்டப்பட பால்காரர் வண்டி பழுதானதினால், பாலைக் கொடுக்கும்படியாக நின்றுகொண்டிருந்தார். அந்நாட்களில், 'பிள்ளைகளின் சத்தம் தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக" அத்தெருவில் குடியிருந்த ஒருவர் எழுதியிருந்தார். பிள்ளைகள் சுயாதீனமாகப் படிக்கவும், ஓடிவிளையாடவும் வில்சன் தெரு வீடுகளில் இடமும் இல்லாதிருந்தது. அதுவரை விடுதிக்காக சொந்த கட்டிடம் கட்டுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை முல்லர். 300 சிறுவர்கள் தங்குவதற்கு கட்டிடங்களைக் கட்ட விசுவாசத்தோடு ஊக்கமாக ஜெபித்துவந்தார் முல்லர். முதலில் ஒரு விசுவாசி, 1000 பவுண்ட்கள் அனுப்ப, சில நாட்களில் லண்டனைச் சேர்ந்த ஒரு இஞ்சினியர் தான் எந்தவித ஊதியமும் பெறாமல் புதிய விடுதியின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டு முடித்துத் தருவதாக அங்கு வந்தார். பிரிஸ்டலுக்கு வெளியே ஆஷ்லி டௌன் என்ற குன்றுகள் நிறைந்த இடத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் கட்டிடப்பணி தொடங்கியது; தேவ கிருபையால் மூன்றே ஆண்டுகளில் முன்னூறு பிள்ளைகள் சுயாதீனமாகத் தங்கக்கூடிய ஹோம் கட்டி முடிக்கப்பட்டது. 1870 ஆம் ஆண்டு 2000 பிள்ளைகள் தங்கும்படியாக புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு சிறிய பட்டணம் போல் ஆனது. இந்நாட்களில், கணவரோடு 40 ஆண்டுகள் இணைபிரியாமல் சேவை செய்த மேரி முல்லர் இளைப்பாறுதலில் பிரவேசித்தார். 

ஒரு ஷில்லிங்கைக் கொண்டு அற்பமாக ஆரம்பமான இவ்வூழியம், ஆயிரக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுத்ததோடு, முதியோர் இல்லங்கள், ஞாயிறுப் பள்ளிகள், பகல் நேரப்பள்ளிகள் என இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியது. 189 மிஷனரிகளை தாங்கினார் முல்லர். தனது 70 ஆம் வயதில், விடுதிகளின் பொறுப்பை மகள் லிடியாவின் கணவர் ஜேம்ஸ் ரைட்டிடம் ஒப்படைத்துவிட்டு, அவரோ ஓய்வெடுக்காமல், உலகளாவிய நற்செய்திப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டார். இந்தியா உட்பட 42 நாடுகளில் 30 இலட்சம் மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார்.  வேதாகமத்தை ஒன்று இரண்டு முறையல்ல, 200 முறைகள் முழுவதுமாய் வாசித்து முடித்திருந்தார்; அதிலும், 100 முறைகள் முழங்காலிலேயே வாசித்திருந்தார். 1898 ஆம் ஆண்டு தனது 92 வயதிலும் ஓய்வின்றி செயல்பட்டு வந்தார். அனாதைகளின் அருமைத் தந்தையாய் ஆதரவற்றோரின் அடைக்கலமாய் வாழ்ந்த முல்லர், 1898-ம் ஆண்டு மார்ச் 9 மாலை படுக்கைக்குச் சென்றவர், காலையில் படுக்கையிலிருந்து எழாமல், நித்தியத்தைக் கழிக்கும்படியாகக் கர்த்தரிடம் சென்றார்! ஆண்டவரின் நாம மகிமைக்காக அரும்பெரும் காரியங்களைச் செய்து, வாழ்வில் ஒளி இழந்தோர்க்கு வழிகாட்டி, எதிர்காலம் பெறச் செய்தவர் முல்லர். அனாதை இல்லங்களை நடத்துவோருக்கு முன்னோடியாய் வாழ்ந்தவர்! அன்பான தம்பி தங்கைகளே! உங்களிடமிருந்தும் கூட இயேசு எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்! இல்லையா.