June 2026

 


ஹாய் தம்பி தங்கையே!

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்ற நர்சுகள் இல்லாத நாட்கள் அவை. அந்நாட்களில், 'என் வாழ்நாள் முழுவதும் நோயுற்றோருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தொண்டுசெய்து, மனிதர்களின் துயரத்தைக் குறைக்கும் செவிலியர் பணி செய்து வாழ்வதாகவே இருக்கும்;. அதுவே நான் இயேசுவுக்கு செய்யும் சேவை என்று விசுவாசிக்கிறேன்" என்று தன் இளம் வயதில் அர்ப்பணித்தார் ஆக்னஸ் எலிசபெத் ஜோன்ஸ். 

1832 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று அயர்லாந்தின் ஃபாஹான்  (Fahan) என்ற கிராமத்தில் பிறந்தார் இவர். தேவ பக்தியுள்ள ஆக்னஸின் தந்தை, தேவபயத்தை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்ததோடு, தேவனையும் அவர் சேவையையும் நேசிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தினார். 1850-ல் தந்தையின் மறைவு இவர்களை டப்லின் பட்டணத்திற்கு குடிபெயரச்செய்தது. எனினும், தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டதினால் மீண்டும் சொந்த ஊரான ஃபாஹானுக்குத் திரும்பினர். நர்ஸ் தொழில் செய்வதை ஒரு கீழ் மட்டத் தொழிலாகவே இங்கிலாந்து மக்கள் அப்போது பார்த்தனர். எனினும், 24 வயதான ஆக்னஸ், அங்குள்ள மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்ளூ தீக்காயங்களுக்கு எந்த கட்டணமுமின்றி மருத்துவம் பார்ப்பதில் தேறினவர் அவர். தேவ அன்பினால் நெருக்கப்பட்டவராக, ஒரு சேவையாகவே இதைச் செய்துவந்தார். 

அதுமாத்திரமல்ல, துண்டுப்பிரதிகளையும் கொடுத்து சுவிசேஷம் சொல்லி மக்களுக்காக ஜெபித்துவந்தார்ளூ அவர்களில் ஒருவராக மாறினார் ஆக்னஸ். நீண்ட தூரப் பயணத்தினால் உண்டான களைப்பிலும், ஊழியத்தில் அவருக்குக் கிடைத்த மகிழ்ச்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியது. வீடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி அவர்களை ஆவிக்குரிய வழிகளில் நடத்திவந்தார். அந்நாட்களில், கிறிஸ்தவ நர்ஸாக இருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரைப் போலவே திருமணமின்றி வாழ தன்னை அர்ப்பணித்தார். 1860-ம் ஆண்டு, 'சிஸ்டர்" ஊழியப் பயிற்சிக்காகச் சென்றபோது, இரண்டு ஆண்டுகள் நர்சிங் பயிற்சியையும் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பயிற்சி பெற்றவர்களுள், ஆக்னஸ் தனித்து மிகவும் சிறப்பான முன்மாதிரியானவராக அனைவரின் கவனத்தையம் ஈர்த்தார். பயிற்சியோடு நோயாளிகளையும் அன்போடு விசாரித்து பராமரித்து உதவிசெய்வதில் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர்.

1861-ல் லண்டன் சென்று, வேதாகமப் பெண்கள் பணியில் இணைந்து, வேதபாடம் நடத்தும் பொறுப்பாளராக, ஆஸ்பத்திரிகளிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தாய்மார் மற்றும் பெண்களுக்கு வேதபாட வகுப்புகள் நடத்தினார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் ஆரம்பித்த செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியின் நர்சிங் காலேஜில், தனது தரிசனத்தின் பாதையில் 1862-ல் இணைந்தார். 1865-ம் ஆண்டு, லிவர்பூலில் உள்ள மருத்துவமனையில், கைவிடப்பட்ட மற்றும் சாகும் தருவாயில் உள்ள நோயாளிகள் மத்தியில், பணிசெய்ய அழைக்கப்பட்டபோது, மறுப்பின்றி வெறுப்பின்றி அதனை ஏற்றுக்கொண்டார். பலவித தீமைகளினால் தங்கள் சுகத்தைக் கெடுத்து, உணவுபற்றாக் குறையினால் மெலிந்து தேய்ந்தவர்கள், சுகாதாரமற்றக் குடிநீரால் சுகாதாரமற்ற வாழ்க்கையினால் சீரழிந்தவர்கள் இவர்களுக்குத் தான் இங்கே அடைக்கலம். இவர்களது மிகவும் சவாலான இந்த நிலைமையைப் பார்த்த ஆக்னஸ் சோர்ந்துபோய்விடவில்லை. மாறாக, இயேசுவின் மனதுருக்கம் கொண்டவராய் ஊழியத்தைத் தொடர்ந்தார். 

ஆக்னஸ் பொறுப்பெடுத்த முதல் நாளிலிருந்து பெரிய மாற்றங்கள் அங்கே நிகழ ஆரம்பித்தன. பயிற்சி பெற்ற அநேக நர்சுகளை அங்கே வேலையில் அமர்த்தி, மருத்துவ சேவையின் தரத்தையும் உயர்த்தினார். நோயாளிகளை மிகவும் அன்போடு விசாரித்து, நல்ல சுவையான உணவுகளைக் கொடுத்து பராமரித்தார். அதுவரை அங்கே வந்த நோயாளிகள், நோய் குணமாகாமல் செத்துமடிந்த நிலை மாறி, ஆத்துமாவிலும் சரீரத்திலும் சுகம் பெற்று வீடு திரும்ப ஆரம்பித்தனர். ஒவ்வொரு நோயாளியும் தேவனின் படைப்பாக இருப்பதால், அவர்களுக்கு சேவை செய்வதை ஒரு புனித பணியாகவே அவர் கருதினார். இவரது இந்த மனப்பான்மை, மருத்துவமனையில் பணிபுரிந்த மற்ற நர்ஸ்களுக்கும் ஊக்கமாக அமைந்ததுளூ பல மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்தது. நைட்டிங்கேல் அம்மையார் ஆக்னஸின் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் கவனித்து, அவரை மிகவும் பாராட்டினார்.

அதிகாலையிலேயே எழும்பி, ஜெபித்து, காலை 5:30 மணிக்கு தொடங்கும் அவரது ஓட்டம், தினமும் இரவு 11:00 மணி வரை தொடர்ந்தது. நீண்ட நேரம், ஓய்வில்லாமல் நோயாளிகளின் நலனுக்காக, தன் உடல் நலத்தைக் கூட கவனிக்காமல் செய்த அயராத கடின உழைப்பு, அவரது சரீரத்தைப் பாதித்தது. டைபாயிடு ஜூரம் பரவிக்கொண்டிருந்த அந்நாட்களில், ஆக்னஸ்-ம் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்ளூ இரண்டு வார போராட்டத்திற்குப் பின், 1868 பிப்ரவரி 19 அன்று தனது 35-வது வயதிலேயே  தன் ஓட்டத்தை வெற்றியோடு முடித்து நேசரின் மார்பில் சாய்ந்தார். ஆக்னஸ் மரித்த செய்தியைக் கேட்ட நோயாளிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 

  அன்பான குட்டிப்பிள்ளைகளே! ''எங்களைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா?"" என்று ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு நீங்களும் ஆக்னஸ் போல செயல்படமுடியுமா?