March 2025




    வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும், அனுபவிக்கவும் புறப்பட்ட அதோனிராம் ஜட்சனுக்கு இளம்போதகர் ஒருவர் சத்திய வார்த்தைகளைச் சொன்னபோது, அது அவரை எரிச்சல் அடையவைத்தது. உல்லாசமாய் ஊரெல்லாம் சுற்றி வந்து, இரவு நேரம் மிகவும் களைப்பாய் இருந்த ஜட்சன் சத்திரம் ஒன்றில் சற்று இளைப்பாற ரூம் கேட்கின்றார். காலியாக இருந்ததோ ஒரே ஒரு ரூம் தான்; ஆனால், அடுத்த ரூமில் இருப்பவரோ ஒரு நோயாளி, மரணப்படுக்கையில் அலறிக்கொண்டும், கதறிக் கொண்டும் பரிதாபமாக இருக்கிறார். 

வேறு வழியின்றி அந்த அறையில் படுக்க நினைத்தபோது, அந்த அடுத்த அறைக்கு டாக்டர்கள் வந்துபோவதும் மற்றும் நோயாளியின் கதறலும் இவரின் நிம்மதியைக் கெடுத்து தூங்கவிடாமல் செய்தது. 'மரணத்திற்குப் பின் எங்கே? என்ன நடக்கும்? மரணம் என்றால் என்ன?' இப்படிப்பட்ட காரியங்கள் அவர் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தன. இங்கே அலறிக்கொண்டிருக்கிறானே அவன் மரித்தபின் எங்கு போவான்? என் உயிர் நண்பன் ஈமாஸ் இங்கே இருந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லி 'நரகம் என்று ஒன்றும் கிடையாது, அதற்குப் பயப்படாதே' என்று சொல்லுவானே அவன் என்று சிந்தித்தார். அதிகாலை வேளையிலே அந்த சத்தமும் அடங்கிப்போனது. யார் அந்த மனிதன்....? காலையில் விசாரித்தபோது அவருக்கு தலையே சுற்றி உலகமும் கூடவே சேர்ந்து தலைகீழாகச் சுற்றியது. ஏனென்றால் உயிருக்காகப் போராடிய அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, தன்னுடைய உயிர் நண்பன் ஜேக்கப் ஈமாஸ் தான். இதனை அறிந்தபோது, ஜட்சன் அலறினார். பீதி அடைந்த அவர் மேலும் சிந்திக்கலானார், நிம்மதி இன்றித் தவித்தார். 

     இன்றைக்கும், 'நரகம், மோட்சம் இவைகளை யார் கண்டது? எல்லாம் கற்பனைதான், எல்லாம் இந்த உலகத்தில்தான், அதோடு எல்லாம் முடிந்துவிடும்; மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை' என்று சொல்லும் ஒரு கூட்டத்தினர் உண்டு. குட்டீஸ் இப்படிப்பட்டவங்ககிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சரியா? 

ஆறு வாரங்களுக்குப் பிறகு 1808-ல் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் அதோனிராம் ஜட்சன்.  அதன் பின் ஆழ்ந்த நிம்மதியைக் கண்டடைந்தார். தன்னுடைய ஆசை விருப்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 'ஆண்டவரை மாத்திரமே தன் வாழ்நாள் முழுவதும் பிரியப்படுத்தவேண்டும்' என்று எழுதிவைத்துக்கொண்டார். அப்போது, அவர் படித்த ஒரு புத்தகம் அவருக்கு மிஷனரி சவாலைத் தந்தது. இதனால், அவருடைய உள்ளத்தில் மிஷனரி பாரம் வந்தது. சிறுபிள்ளையாக இருக்கும்போது, 'உலகம் எங்கும் புறப்பட்டுப் போங்கள்' என்று பாடிய பாடல் அவரை அதிகமாகக் கவர்ந்தது. அது மட்டுமல்ல, இவரது விருப்பம் எல்லாம் தான் ஒரு வெளிநாட்டு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்பதாகவே மாறிவிட்டது. அவரை அனுப்புவதற்காக மிஷனரி சங்கம் அமெரிக்காவில் அந்த நாட்களில் இல்லாதபடியால், எப்படி செல்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. இது பற்றி அவர் ஊக்கமாக ஜெபித்தார். மிஷனரியாகப் புறப்பட்டுப் போவது பற்றிய தன்னுடைய ஆழமானக் கருத்துகளை அருட்பணி வாஞ்சை நிரம்பிய தனது நான்கு நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு, ஐந்து பேருமாக சேர்ந்து இதற்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அன்பின், ஆண்டவரோ விசேஷித்த முறையில் அவருக்கு வழியை திறந்துவைத்தார். 

     அதோனிராம் ஜட்சன், ஆன் ஹசில்டன் என்ற அம்மையாரை 1812 ஆம் ஆண்டு மணந்தார். பதிமூன்று நாட்களில் மிஷனரிப் பணி செய்யும் பொருட்டாக இந்தியா நோக்கி புதுமணத் தம்பதியினர் பயணமானார்கள். இதயத்தில் இந்தியா இருந்தும், ஆண்டவரின் திட்டங்கள் அவரை மியான்மர் தேசத்திற்கு நேராக திசை திருப்பியது. 

  அந்நாட்களில் மியான்மர் சர்வாதிகாரியான ஒரு மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மக்கள் அவனுக்கு அடிமைகளாகவே இருந்தனர். அங்குள்ள அரசன் கொடுங்கோல் ஆட்சி செய்து ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்தையும் வஞ்சித்து அவர்களை அடிமையாக நடத்திவந்ததோடு, அரசரின் விருப்பம்தான் நாட்டின் சட்டமாக மாறியது. எந்த பர்மிய அரசனும் வேறு மதம் அங்கு பரவுவதை அனுமதிக்கவில்லை. மிஷனரிகளுக்கு அவன் ஒரு எதிரியாகவே விளங்கினான். புத்த மதம் பர்மாவின் தேசிய மதமாகக் கருதப்பட்டு வந்தது. அது பெரும் அளவில் அங்கு பரவி இருந்தது. அம்மதத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார்கள். ஒரு கிறிஸ்தவரோ அல்லது மிஷனரியோ கூட பர்மாவில் கிடையாது. கிறிஸ்துவைப் பற்றி அங்கு ஒருவரும் ஒருபோதும் கேள்விப்பட்டதே கிடையாது. கிறிஸ்து தங்கள் உள்ளங்களில் இல்லாதபடியினால் துக்கம் நிறைந்த முகத்தோடும், பாரம் நிறைந்த இருதயத்தோடும் அங்குள்ள மக்கள் அங்கும் இங்குமாக நடந்து அலைந்து திரிந்தனர். அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும் வாய்ப்பிற்காக ஜட்சன் தம்பதியினர் மிகவும் அதிகமாகச் சிரத்தை எடுத்து, அந்த நாட்டு மொழியை கற்க ஆரம்பித்தார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜட்சனின் மனைவி இந்தியாவில் உள்ள சென்னைக்கு பிரசவ மருத்துவ உதவிக்காகச் சென்றார். அங்கு அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது; ஆனால், எட்டு மாத காலத்திற்குப் பிறகு அந்த குழந்தை இறந்துவிட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வேதனை அடைந்தனர். 

    பர்மியர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே வேதம் கிடைக்கும் என்றால் அவர்களால் இரட்சிப்பைக் கண்டடைய முடியும் என்பதை ஜட்சன் நம்பினார். ஆகவே அவர் ஒரு நாளில் 14 மணி நேரம் வரை பர்மிய மொழியை ஆழமாகக் கற்று வேதாமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஒரு சிறிய அச்சிடும் கருவியை வைத்துக்கொண்டு, அதன் மூலம் அவர் துண்டுப் பிரதிகளையும், வேதாகமத்தின் பகுதிகளையும் அச்சிடத் துவங்கினார். அச்சிடும் தொழில் அறிந்திருந்த திரு. ஹாக் என்னும் புதிய மிஷினரி தன்னுடைய மனைவியோடு அங்கு வந்து சேர்ந்தார். மத்தேயு நற்செய்தி நூலை விரைவாக அச்சிட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். கிறிஸ்துவைப் பற்றிப் படிப்பதற்கு ஏதாவது புத்தகங்கள் தாருங்கள் என்று கேட்ட ஒருவருக்கு வெறும் ஐந்து பக்கங்கள் மாத்திரமே ஆயத்தமாக இருந்த மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தைக் கொடுத்தார். இப்படியாக தாகமுள்ள ஆத்துமாக்கள் அவர்களைத் தேடி வந்தனர். 

      பொதுமக்கள் கூடுவதற்காக ஒரு இடத்தை ஜட்சன் அமைத்து பர்மிய மொழியில் பிரசங்கம் பண்ணினார். இரவு நேரங்களில் அவர் அதிக நேரம் மக்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பார். இவர் பேசுவதை கேட்பதில் அநேகர் அக்கறை காட்டினார்கள். அவர்களில் ஒரு சிலர் புத்த மதக் குருக்களாகவும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் வந்து இறங்கி ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே 'மௌன் நவ்' என்ற மனிதன் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன்வந்தார். துன்பம் வரினும், மரணம் வரினும் தைரியமாக அதை ஏற்றுக் கொள்ள முன்வந்த இவரைப் போன்று மேலும் 18 பேர் அவர்களோடு மந்தையில் சேர்ந்துகொண்டனர். அந்நாட்களிலே இவரது மனைவி ஆன் ஹசில்டன் அதிகமாக சுகவீனம் அடைந்ததினாலே சிகிச்சைக்காக அமெரிக்க தேசத்துக்கு அனுப்பப்பட்டார். 

     ஜட்சன் தன்னுடைய போதனைகளையும், மொழிபெயர்ப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வந்தார். அவர் இறுதியாக புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். அப்பொழுது புதிய சக்கரவர்த்தி ஒருவர் பதவியேற்றார். தான் செய்திருந்த வேலைக்கு அனுமதி பெறும்படிக்கு அவரைக் காண ஜட்சன் சென்றார். அந்நாட்களில், பிரிட்டனுக்கும் பர்மாவுக்கும் இடையே யுத்தம் நடந்தபடியினால் வெளிநாட்டினர் அனைவரும் ஒற்றர்களாகவே பார்க்கப்பட்டபடியால், ஜட்சன் கைது செய்யப்பட்டு 17 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் மிகவும் அதிகமான கொடுமைகளை அனுபவித்தார் ஜட்சன்.  

        20 மாதங்கள் பெரும்பாடுபட்ட பிறகு ஜட்சன் விடுதலை செய்யப்பட்டு பர்மிய அரசின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். ஆறு வாரங்கள் அவர் இந்தப் பணியைச் செய்த பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் வீடு சென்றபோது அவருக்குக் காத்திருந்த காட்சி அவர் மனதை அதிகமாக உருகவைத்தது.                       ......... தொடரும்